ஜோகோவிச் தெரியுமா? பாஜகவுக்கும் ஒருநாள் இதே கதிதான்! ஆருடம் கணித்து சொன்ன கார்த்தி சிதம்பரம்
சென்னை: "பாஜகவை எதிர்த்தால் ஊழல்வாதி, அவர்களுடன் சேர்ந்தால் புனிதர்களா? பாஜக ஜோகோவிச் போல தோற்றுப்போகும்" என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து வருகின்றன. அந்த வகையில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் திமுகவும் பங்கெடுக்கிறது. இந்நிலையில், "பாஜகவை எதிர்த்தால் ஊழல்வாதி, அவர்களுடன் சேர்ந்தால் புனிதர்களா?" என கார்த்தி சிதம்பரம் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த அளவில் காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமைய தற்போது கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது ஒரு நல்ல முயற்சி. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினால்தான் கூட்டணிக்கான தளம் அமையும். அதேநேரம் எதிர்க்கட்சிகளிடம் முரண்பாடுகள் இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இது பேச்சுவார்த்தை மூலமே களையப்படும்.
பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிராக, மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான ஒற்றை புள்ளியில் எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும். பாஜகவை எதிர்ப்பவர்கள் ஊழல்வாதிகள் என்று விமர்சிக்கப்படுகிறார்கள். இது கொச்சையான விமர்சனமாகும். மகாராஷ்டிராவில் அஜித் பவார் உடன் இருந்தவர்களை ஊழ்வாதிகள் என்று பாஜக விமர்சித்திருக்கிறது. ஆனால், இதே அஜித் பவாரை தனது கட்சியில் இணைத்துக்கொண்டது.
பாஜகவில் இணைபவர்கள் புனிதர்களாக மாறிவிடுகிறார்களா என்ன? பாஜக ஜோகோவிச் போலதான் தோற்கும். வரலாற்று புள்ளிவிவரங்கள், அனுபவம், திறமையை வைத்து பார்த்தால் விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச்தான் ஜெயித்திருக்க வேண்டும். ஆனால், வெற்றிபெறவில்லையே! அதேபோல கடந்த இரண்டு மக்களவை தேர்தலில் வென்றதாலேயே பாஜக மீண்டும் 2024ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றிருந்த நிலையில், இந்த முறை 24 அரசியல் கட்சிகள் பங்கேற்கின்றன. புதியதாக, வைகோ தலைமையிலான ம.தி.மு.க., இ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான கொ.தே.ம.க., தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க., இடதுசாரிக் கட்சிகளான ஆர்.எஸ்.பி, பார்வர்டு பிளாக், கேரளத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் ஐ.யூ.எம்.எல்., கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் புதியதாக இந்த கூட்டத்தில் பங்கெடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications