ஆட்சியில் பங்கா? சிறிய கட்சி வைத்திருக்கும் விஜய் பேசுவது பலவீனத்தை காட்டுகிறது! விசிக ரவிக்குமார்!
சென்னை: ஆட்சியில் பங்கு என நடிகர் விஜய் கூறியது அவரது பலவீனத்தை காட்டுகிறது என்றும் அவர் பகவத் கீதையை படிப்பதோடு அம்பேத்கரை படிக்க வேண்டும் என்றும் விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் விசிக எம்பி ரவிக்குமார் எம்பி தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்க வேண்டும்.

தனது கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக புரட்சியாளர் அம்பேத்கரை திரு விஜய் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். மதச்சார்பின்மைதான் தனது கொள்கை என்று அறிவித்திருக்கும் விஜய், இன்று மாநாட்டு மேடையில் இந்து மதத்தின் குறியீடாக பகவத் கீதையையும், இஸ்லாம் மதத்தின் குறியீடாகக் குர்ஆனையும், கிறிஸ்தவ மதத்தின் குறியீடாக பைபிளையும் நினைவுப் பரிசாகப் பெற்றார்.
பகவத் கீதையைப் பற்றி அம்பேத்கர், 'புரட்சியும் எதிர்ப் புரட்சியும்'என்ற தனது நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.
" பௌத்தம் இந்த சமூகத்தில் தார்மீக மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. மௌரியப் பேரரசர் அசோகர் புத்த மதத்தைத் தழுவியபோது, சமூகப் புரட்சி அரசியல் புரட்சியாக மாறியது.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பௌத்த மன்னர்களால் பாதிக்கப்பட்ட பிராமணர்கள், புஷ்யமித்ர சுங்கனின் தலைமையில் ஒரு எதிர்ப்புரட்சியைத் தொடங்கினார்கள். அந்த
எதிர்ப்புரட்சிதான் பிராமணியத்தை மீட்டெடுத்தது.பகவத் கீதை, இந்த எதிர்ப் புரட்சிக்குக் கருத்தியல் மற்றும் தார்மீக நியாயத்தை வழங்குவதற்காக இயற்றப்பட்டது" என்று தனது நூலில் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
திரு விஜய் அவர்கள் பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் அம்பேத்கரை சாரமற்ற வெற்றுக் குறியீடாகப் பயன்படுத்துவதில் போய் அது முடிந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆட்சியில் பங்கு என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை மட்டுமல்ல. அனைவரது கொள்கையும்தான். அது போல் கட்சித் தொடங்கும் போதே ஆட்சியில் பங்கு என விஜய் கூறியது பெருந்தன்மையாக பார்க்க முடியாது. அது அவரது பலவீனமாகத்தான் பார்க்க முடியும்.
ஆட்சியில் பங்கு என சிறிய கட்சிகள் கூறுவதை விட திமுக, அதிமுக ஆகிய பெரிய கட்சிகள் கூறினால்தான் அது தாக்கத்தை ஏற்படுத்தும். விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என தெரிகிறது என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அது போல் அவர் மற்றொரு ட்வீட்டில் கூறியிருப்பதாவது: ட்ரெயிலரைப் பார்த்துட்டு படத்தைப் பற்றி மதிப்பிட முடியாது. விஜய் நடத்திய மாநாடு, அதில் அவருடைய பேச்சு- இதை பற்றி அவர் பாணியிலேயே சொல்லணும்னா இது ஒரு ட்ரெய்லர். ஒரு சினிமாவோட ட்ரெய்லர்ல அதுல இருக்கிற முக்கியமான விஷயத்தையெல்லாம் வெட்டித் தொகுத்து மக்களை ஈர்க்கிற மாதிரி கொடுப்பாங்க.
ட்ரெய்லருடைய நோக்கம் மக்களை தியேட்டரை நோக்கி வரவழைக்கணும் என்பதுதான். அந்த மாதிரி இந்த மாநாட்டுல அவருடைய பேச்சு ஒரு ட்ரெய்லர் மாதிரி அமைஞ்சிருக்கு. முழு நீள படம்னா அது அரசியல் களத்துல அவரு எப்படி பெர்ஃபார்ம் பண்ணப் போறார் என்பதுதான். ஒரு படத்தை முழுமையா பார்த்துட்டு தான் அதைப் பற்றிய மதிப்பீட்ட சொல்ல முடியும்.
ஒரு ட்ரெய்லரைப் பார்த்துட்டு இந்தப் படம் சில்வர் ஜூப்ளி கொண்டாடும், கோல்டன் ஜூப்ளி கொண்டாடும்னு சொல்றதோ அல்லது இந்த படம் ஃப்ளாப் ஆயிடும்னு சொல்றதோ சரியா இருக்காது. மாநாட்டை நடத்தி இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு. அவருடைய பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்குனு பார்ப்போம். அதன் பிறகு அதைப் பற்றி சொல்லலாம். அதுக்குள்ள இந்த மாநாட்டை வச்சு அவரைக் கொண்டாடுவதும் தேவையில்லை, அவரை நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications