இனிமே பாட்டு போட்டீங்கன்னா கடும் நடவடிக்கை! மாநகர போக்குவரத்து பேருந்துகளில் புதிய விதி.. பின்னணி
சென்னை: பெருநகர போக்குவரத்து பேருந்துகளில் பயணத்தின்போது இனி சத்தமான இசை ஒலிக்கக்கூடாது என போக்குவரத்துக்கழகம் பேருந்து ஓட்டுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பயணத்தின்போது அடுத்து வரும் நிறுத்தம் உள்ளிட்ட சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்ள இடையூறாக பாட்டு சத்தம் இருப்பதால் பொதுநலன் கருதி அதை தவிர்க்க வேண்டும் என உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கப்படுவது சில நாட்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி ஒலிக்கும் பாடல்களால் பேருந்து கட்டணம், மீதி சில்லறை மற்றும் அடுத்து வரவுள்ள நிறுத்தங்கள் தொடர்பான தகவல்களை சரியாக அறிந்துகொள்ள முடியாமல் பயணிகள் அவதியுறுகின்றனர் என போக்குவரத்து ஆர்வலரான டி.கே.பாண்டியன் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளார்.

புகார்
இதன் தொடர்ச்சியாக மாநகர போக்குவரத்துக்கழகம் மேற்குறிப்பிட்ட உத்தரவை வெளியிட்டுள்ளது. இவ்வாறு ஒலிக்கப்படும் பாடல்கள் பெரும்பாலும் இரைச்சலுடன் ஒலிக்கப்படுவதாகவே பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக சில முக்கியமான அலுவலக ரீதியான உரையாடல்களைக்கூட மக்களால் மேற்கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதே போன்ற குற்றச்சாட்டை பலரும் முன்வைத்துள்ளனர்.

நடவடிக்கை
தற்போது உள்ள சிவப்பு நிற பேருந்துகளில் புதிய அம்சமாக ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன இது அடுத்து வரும் பேருந்து நிறுத்தத்தை அறிவிப்பதற்காகவே உள்ளன. ஆனால் நடத்துநர் அல்லது ஓட்டுநர்கள் இதை பாட்டு கேட்பதற்கென பயன்படுத்தி வருகின்றனர் என விமர்சனங்கள் மேலெழுந்துள்ளன. மட்டுமல்லாது இரவு நேரங்களில் பெண்கள் முகம் சுளிக்கும் அளவில் பாடல்கள் ஒலிக்கப்படுவதாகவும் புகார் உள்ளது.

பெண்கள் புகார்
இதனால் தனியாக இரவில் பயணிக்கும் பெண்கள் அசௌகரியமாக உணர்வதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இவ்வாறான சர்ச்சைகள் ஏற்கனவே எழுந்தபோது போக்குவரத்து அதிகாரிகள் இந்த ஸ்பீக்கர்களை அகற்றினர். ஆனால் இறுக்கமான பல நேரங்களில் ஓட்டுநர்களின் அழுத்தத்தை குறைக்க பாடல்கள் கேட்க ஸ்பீக்கர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தடை
ஆனால் தொடர்ந்து வரும் புகார்களையடுத்து "பயணத்தின்போது பேருந்துகளில் திரைப்படப்பாடல்களை ஒலிக்கவிடக்கூடாது" என கடந்த ஜூலை 8ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார் எம்டிசி நிர்வாக இயக்குநர் அன்பு ஆபிரகாம். மேலும் உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications