பாடப் புத்தங்களில் திமுக பற்றி தவறான தகவல்கள்.. விரைவில் உரிய நடவடிக்கை.. அமைச்சர் பொன்முடி
சென்னை: திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் உள்ள பாடங்களில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் பற்றி தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இது குறித்து விரைவில் துறை ரீதியாலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் உள்ள பாடங்களில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் பற்றி தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், புதிய கல்விக் கொள்கை குறித்துப் பேசிய அவர், அது மாநில உரிமைகளில் தலையீடும் வகையில் இருப்பதால், அதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

பொன்முடி செய்தியாளர் சந்திப்பு
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, "திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்குத் தொலைதூரப் படிப்புகளுக்கு பொதுவாகப் பாடப் புத்தகங்கள் அனுப்பப்படும். அந்த பாடப்புத்தகங்களில் மிக தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக எம்.ஏ. சமூக அறிவியல் பாடத்தைப் படிக்கும் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள புத்தகத்தில் பல இடங்களில் தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் நான் படித்துக் காட்டுகிறேன்.

தவறான தகவல்கள்
இந்திய கட்சிகள் குறிப்பாக மதங்களுக்கு எதிரான திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் பொதுமக்களை வாக்கு வங்கிகளாகத் தொடர்ந்து மாற்றி வருகின்றன. அவை மக்களைத் தேசியப் பாதையில் கலந்துவிடாமல் தொடர்ந்து தடுத்து வருகின்றன. மேலும், அவை சிறுபான்மையினரைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றன. முகமதியர் கலவரத்தை உருவாக்கி, வன்முறை வெடிக்கும் போதும், அதைக்கூடக் கண்டிக்காமல் இருக்கின்றன எனப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன.

உரிய பதில் இல்லை
இதெல்லாம் சமூக அறிவியல் & வரலாறு புத்தகத்தில் வரவேண்டிய விஷங்கள் தானா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இவை அனைத்தும் திறந்தவெளி பல்கலைக்கழகங்கத்தின் சமூக அறிவியல் துறை பாடப் புத்தகத்தில் உள்ள விஷயங்கள். இவை ஏதோ வெறும் செய்திகளில் மட்டும் வந்தவை அல்ல. இது தொடர்பாக இந்த பாடத்தின் ஆசிரியர், திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை ஆகியோர் அழைத்து விசாரித்தோம். ஆனால், அவர்களிடம் முறையான பதில் இல்லை.

துறை ரீதியிலான நடவடிக்கை
இவையெல்லாம் எதைச் சொல்ல வருகின்றன என்பது அனைவருக்கும் தெரியும், நான் தனியாக கூறி வேண்டியது இல்லை. நானும் சமூக அறிவியல் பாடத்தைப் படித்து, அதில் ஆசிரியராகவும் இருந்தவன்தான். எனது அனுபவத்தில் இதுபோல ஒரு முறைகேட்டை நான் பார்த்ததில்லை. எனவே, இது தொடர்பாகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து, தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கை
இதேபோல கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட மற்ற புத்தங்களில் என்ன மாதிரியான கருத்துகள் சொல்லப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. எனவே, அனைத்து தொலைதூரக் கல்விக்கான புத்தகங்களிலும் உரிய ஆய்வு நடத்தி, தேவைப்படும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். புதிய கல்விக் கொள்கை என்பது மாநில உரிமைகளில் தலையிடுவதாகும். ஆகவே, புதிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் நுழையவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications