வந்தது விடிவுகாலம்.. சென்னை முடிச்சூரில் திறக்கப்பட்டது புதிய ஆம்னி பேருந்து நிலையம்! இவ்ளோ வசதிகளா?
சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். மேலும் கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகில் கட்டப்பட்டுள்ள காலநிலை பூங்கா, கோயம்பேடு சந்தையில் ரூபாய் 1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தையும் இன்று திறந்து வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், அதிமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், முடிவடையாமல் இருந்தது. இந்த நிலையில் தான் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு கடந்த ஆண்டில் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உட்பட பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடுக்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம்: இந்நிலையில், முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.42.70 கோடி செலவில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான இடம் அமைக்கப்பட்டு உள்ளது. தாம்பரம் அடுத்த வண்டலூர் வெளிவட்டச் சாலை முடிச்சூர் அருகே, 5 ஏக்கா் பரப்பளவில் ஒரே நேரத்தில் சுமார் 120 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்தும் அளவிற்கு இந்த பஸ் நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஓய்வறைகள், பல வசதிகள்: ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் இந்த பேருந்து நிலையம் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநா்கள், கிளீனா்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஓய்வெடுக்கும் அளவுக்கு இரண்டு கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நிலத்திலிருந்து உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆம்னி பேருந்து நிறுத்தும் இடத்தில் உணவகங்கள், தங்குமிடங்கள், ஓய்வறைகள், கழிப்பறைகள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் 120 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
போக்குவரத்து பாதிப்பு குறையும்: இதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகள் இனி, முடிச்சூர் பகுதியில் இருந்து இயக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து பாதிப்பு குறையும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இனி அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்பதால், பண்டிகை காலங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கும் ஏதுவாக இருக்கும்.
புதிய பூங்கா: மேலும், கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகில் 16 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.20 கோடி செலவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது புதிய காலநிலை பூங்கா. இதனையும் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முடிச்சூர் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம், கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அருகில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்கா ஆகியவற்றை இன்று திறந்து வைத்துள்ளார். மேலும், கோயம்பேடு சந்தையில் ரூபாய் 1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தையும் இன்று திறந்து வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications