முகிலனை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும்.. ஹென்றி டிபேன் கோரிக்கை
Recommended Video
சென்னை: சமூக செயல்பாட்டாளர் முகிலனை கூடிய விரைவில் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூக செயற்பாட்டாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகிலன், மதுரை செல்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றார். இதன் பிறகு, அவர் எங்கே இருக்கிறார் என்பதை யாராலும் அறிய முடியவில்லை. இந்த நிலையில் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், சிபிசிஐடி காவல்துறை இந்த வழக்கை விசாரணையை சற்று தீவிரப்படுத்தியது. முகிலனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சுவரொட்டி மூலமாக சிபிசிஐடி போலீசார் அறிவிப்புகளும் வெளியிட்டனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில், முகிலனை போலீசார் அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியானது.
இதையடுத்து, ஆந்திர காவல்துறையை சிபிசிஐடி போலீசார் தொடர்பு கொண்டு, முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர். திருப்பதியில் இருந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலன், ஆந்திர போலீசாரால் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது குறித்து ஹென்றி டிபேன் இன்று கூறுகையில், முகிலன் உயிரோடு இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முகிலன் தொடர்பாக தகவல் தெரிவித்த சண்முகத்திற்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். காவல்துறை பொறுப்புடன் செயல்பட்டு விரைவிலேயே முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.