சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு பெரிய சிக்கல்.. மோசடி வழக்கில் மும்பை போலீசார் சம்மன்!
சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.5.24 மோசடி செய்த புகாரில் கைதானவரிடம் நடத்திய விசாரணையில் ரவீந்தருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது.
பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக மும்பையில் அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் ரூ.5.24 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரூ.5.24 கோடி மோசடி புகாரில் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்ய மும்பை போலீசார் சென்னை வந்தனர்.

ரவீந்தர் சந்திரசேகரின் உடல்நிலை காரணமாக அவரை கைது செய்யாமல் மும்பை போலீசார் சம்மன் கொடுத்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மோசடி புகாரில் சிக்கி சிறை சென்றவர் ரவீந்தர் சந்திரசேகர்.
சென்னை அசோக் நகரில் லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர், தன்னிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார்.
அதில், நகராட்சி திடக்கழிவுகளை இயக்க ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி, தன்னை திட்டமிட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து பணத்தைத் திருப்பி தராமல் மோசடி செய்ததாகவும் புகார் கூறியிருந்தார்.
இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், 2023 செப்டம்பர் மாதம் ரவீந்தர் சந்திரசேகரைக் கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராகப் பங்கேற்று இருந்தார் ரவீந்தர் சந்திரசேகர்.












Click it and Unblock the Notifications