தட்சணை பெறும் நீங்கள்.. ஓசியைப் பற்றி பேசலாமா? முரசொலி நாளேடு கடுமையான விமர்சனம்!
சென்னை: 'ஓசி பஸ் பயணம்தான் திராவிட மாடலா' என துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதற்கு முரசொலி தலையங்கம் பதிலடி கொடுத்துள்ளது.
துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, திமுக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சித்துப் பேசினார். அப்போது பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தையும் கடுமையாக தாக்கினார்.
'பூர்வீகமே தட்சணையில் வாழக் கூடிய கூட்டத்தின் பிரதிநிதி, ஓசியைப் பற்றி பேசலாமா?' என முரசொலி நாளேடு ஆடிட்டர் குருமூர்த்தியை கடுமையாகச் சாடியுள்ளது.
கோபம் காட்டிய குருமூர்த்தி..! உறுதியாக நிற்கும் அண்ணாமலை! இந்தி விவகாரத்தில் மீண்டும் வார்த்தை போர்!
இலவச திட்டங்கள்
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அப்படியான ஒரு திட்டம் தான் பெண்களுக்கு நகரப் பேருந்தில் இலவச பயணம் திட்டம். இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பாராட்டையும் பெற்றுள்ளது.
இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள் இலவசமாக பயணிக்க முடிகிறது. இதன்மூலம் மாதம் சுமார் 1000 ரூபாய் சேமிக்க முடிகிறது எனத் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் ஓராண்டு நிறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் நகரப் பேருந்தில் பயணித்து பெண்களிடமே இதுதொடர்பாக பேசினார்.
துக்ளக் ஆண்டு விழா
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துக்ளக் இதழில் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசுகையில், பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இப்போது ஆட்சி செய்கிற தி.மு.க அரசு பேருந்தில் பெண்கள் காசின்றி பயணித்தால் அது ஓசியில் பயணம் தான். இதுதான்
திராவிட மாடலா? அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தை அறிவித்து பெண்களை பிச்சைக்காரர்களாக மாற்றி வைத்திருக்கிறது இந்த அரசு எனப் பேசினார்.
குருமூர்த்தி
ஆடிட்டர் குருமூர்த்தியின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு இலவச பயணம் எனும் திமுக அரசின் திட்டத்தை குருமூர்த்தி கேவலமாகப் பேசியிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி' துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு தனது தலையங்கத்தில் பெயர் குறிப்பிடாமல் பதிலடி கொடுத்துள்ளது.
வயிற்றெரிச்சல்
முரசொலி தலையங்கத்தில், "ஓராண்டு காலத்தில் என்ன சாதனை செய்துவிட முடியும் என்று பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் மே 7ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த பட்டியலைக் கேட்ட போது பலரும் வியப்பில் ஆழ்ந்தார்கள். இவ்வளவு சாதனைகளா செய்யப்பட்டன என்று ஆச்சர்யப்பட்டார்கள்.
இந்த திட்டங்களை வரிசையாக நீங்கள் பார்த்தால் அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை மேன்மைப்படுத்தும் திட்டங்களாக அவை அமைந்திருப்பதைப் பார்க்கலாம். இதுதான் சில வர்ணாசிரம சக்திகளுக்குப் பிடிக்கவில்லை. எல்லாரும் வளர்கிறார்களே, எல்லாத் துறையும் வளர்கிறதே என்ற வயிற்றெரிச்சலில் உளறிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஓசி மாடல்
'திராவிட மாடல் என்றால் ஓசி மாடல். அனைத்தையும் ஓசியாகக் கொடுப்பது' என்று 'தலையில் பிறந்த' பிறவி ஒன்று உளறி இருக்கிறது. பூர்வீகமே தட்சணையில் வாழக் கூடிய கூட்டத்தின் பிரதிநிதி, ஓசியைப் பற்றி பேசலாமா?" என முரசொலி தலையங்கத்தில் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு முரசொலி சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல்
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற மே 7 ஆம் நாளுக்கு மாபெரும் வரலாற்றுப் புகழ் உண்டு. சமயம் பரப்புவதற்காக தமிழ்நாட்டுக்கு வந்து -உலகம் முழுக்க தமிழ் பரவக் காரணமாக அமைந்த ராபர்ட் கால்டுவெல்லின் பிறந்தநாள் மே 7 ஆம் நாளாகும். அவர் எழுதிய 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூல்தான் திராவிடம் என்ற சொல்லை மொழிக்களத்தில் விதைத்தது.
எல்லா மொழிகளுக்கும் சமஸ்கிருதம்தான் தாய் மொழி என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் - தமிழ் தனித்தன்மையானது - தமிழில் இருந்து தான் பல மொழிகள் உருவானது என்று சொன்ன மேதைதான் கால்டுவெல்.
திராவிட மாடல் ஆட்சி
'குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன்முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர்கள் திராவிடர் என்று அழைத்தனர்' என்று தனது ஆய்வுத் திறத்தால் நிறுவியவர் கால்டுவெல் அவர்கள். மொழிச் சொல்லாக - இடச் சொல்லாக - இனச் சொல்லாக - இருந்ததை அரசியல் சொல்லாக அயோத்திதாசரும் பெரியாரும் மாற்றினார்கள். அண்ணாவும் - கருணாநிதியும் அதனை ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள்.
இவர்களது மூலத் தத்துவத்தை முன் வைத்து நடக்கும் இந்த ஆட்சியானது 'திராவிட மாடல்' ஆட்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திராவிடம் என்பது இன்று அரசியல் சொல் என்ற எல்லையைத் தாண்டி ஆட்சியியல் சொல்லாக உயர்ந்து நிற்கிறது. 'இந்தியா எங்கும் பரவி இருந்தனர் தமிழர்' என்றார் கால்டுவெல். இன்று இந்தியாவே வியக்கும் ஆட்சியாக இந்த திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது.
அதனால்தான் எரிகிறது
'எல்லார்க்கும் எல்லாம்' என்பது திராவிட மாடல் ஆட்சி. 'அனைத்தும் எங்களுக்கு மட்டுமே' என்பது வர்ணாசிரம ஆட்சி. படிப்பைத் தடுக்கும். கட்டை விரலைக் காவு கேட்கும். அனைவரையும் கோவிலுக்கு வெளியில் நிறுத்தும். நந்தனை எரிக்கும். மறைந்திருந்து கொல்லும். சாலைகளை மறிக்கும். நேருக்கு நேர் பார்ப்பதையே பாவம் எனும்.
இவை அனைத்துக்கும் எதிரானது திராவிடவியல். அத்தகைய ஆட்சியைத்தான் முதலமைச்சர் முன்னெடுத்து வருகிறார். அதனால்தான் அவர்களுக்கு எரிகிறது. அதனால்தான் தமிழினம் மகிழ்கிறது!" என முரசொலி குறிப்பிட்டுள்ளது.