ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சுவலியா? அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ விளக்கம்!
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று திடீரென அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 3 மணி நேரத்தில் சிகிச்சையை முடித்து ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பி இருந்தார். இந்த நிலையில் திடீரென இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலைக் குறித்து நலம் விசாரித்தார். அதன்பின், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்.
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.. மகிழ்ச்சி என்று பதிவிட்டார். இதனால் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். இருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன உடல்நலக் குறைவு என்று தெரியாததால், ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் 3 மணி நேர சிகிச்சைக்கு பின் ஏ.ஆர்.ரஹ்மான் உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நலம் மற்றும் சிகிச்சை தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் நீர்ச்சத்து குறைபாடுகளுக்கான வழக்கமான பரிசோதனை முடித்து வீடு திரும்பினார்.
அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், அவர் நலனுடம் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நீர்ச்சத்து குறைபாடு என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் சிறிது காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அக்கறையுடன் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications