இந்து-முஸ்லிம் காதல்.. ரஹ்மானை அடித்தே கொன்ற பெண் குடும்பம்! காதலியும் மர்ம மரணம் - உபியில் பயங்கரம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் இந்து பெண்ணை காதலித்ததற்காக இஸ்லாமிய இளைஞரை பெண்ணின் குடும்பத்தினர் அடித்துக் கொன்ற நிலையில், அவரது காதலியும் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தினந்தோறும் நாட்டையே அதிர வைக்கும் ஏதாவது ஒரு செய்தி வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு பாலியல் குற்றங்களும், சாதி, மத மோதல்களும், கும்பல் படுகொலைகளும் அங்கு தொடர் கதையாகிவிட்டன.
இந்த நிலையில்தான் இந்து பெண்ணை காதலித்ததற்காக பெண்ணின் குடும்பத்தினரே இஸ்லாமிய இளைஞரை வீட்டுக்கு அழைத்து கொலை செய்ததும், அதன் பின்னர் அந்த பெண்ணும் மர்மமான முறையில் உயிரிழந்ததும் நிகழ்ந்து இருக்கிறது.
ஒரே வகுப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் இஸ்லாம்பூர் பகுதியை சேர்ந்தவர் தன்னு சைனி. பி.எஸ்சி படித்து வந்த இவருக்கும் தன்னுடைய வகுப்பில் படித்து வந்த ஜியாவுர் ரஹ்மான் என்ற இஸ்லாமிய மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நாளடைவில் ஜியாவுர் ரஹ்மானும், தன்னு சைனியும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
வெவ்வேறு மதம்
இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இரு குடும்பத்தினருக்கும் தெரியாமல் இருவரும் பழகி வந்திருக்கின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் பெண்ணின் வீட்டாருக்கு இந்த தகவல் தெரிந்து பிரச்சனையாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை பெண்ணின் வீட்டில் இருந்து ஜியாவுர் ரஹ்மானை அழைத்து இருக்கிறார்கள்.
ரஹ்மான் மீது தாக்குதல்
ரஹ்மானும் சைனி வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு சைனியின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து ஜியாவுர் ரஹ்மானை கொடூரமாக தாக்கி இருக்கின்றனர். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை, வெளியில் வீசி உள்ளனர். அவரை மீட்டு உறவினர்கள் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெண்ணும் மரணம்
இதற்கிடையே மாணவி தன்னு சைனியும் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கிறார். காதலர் கொல்லப்பட்ட மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், பெண்ணின் குடும்பத்தினரே ஆணவக்கொலை செய்திருக்கலாம் என்றும் சிலர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
பிரேத பரிசோதனை
இது குறித்து போலீஸ் தெரிவிக்கையில், "2 குடும்பத்தினரிடம் இருந்து புகார் எதுவும் வரவில்லை. கொல்லப்பட்ட மாணவனின் பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியின் பிரதே பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர் தூக்கில் தொங்கியதால் இறந்தது தெரியவந்து இருக்கிறது. இது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
போன்போட்ட பெண் குடும்பம்
கொல்லப்பட்ட ஜியாவுர் ரஹ்மானின் தந்தை மளிகை கடை நடத்தி வருகிறார். இதுபற்றி பேசிய அவர், "கடந்த செவ்வாய்கிழமை என் மகனை அந்த பெண்ணின் குடும்பத்தினர் தொடர்புகொண்டு அழைத்தார்கள். அங்கு சென்ற அவனை குடும்பத்தோடு சேர்த்து கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். அதன் பின்னர் அவனை வீட்டிலிருந்து வெளியே வீசியுள்ளார்கள்.
உயிரிழப்பு
என் மகன் வெளியில் கிடப்பதாக சிலர் சொன்னதை கேட்டு அங்கு சென்று அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக டேராடூன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொன்னார்கள். புதன்கிழமை டேராடூனில் என் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்." என்றார்.
போலீஸ் பாதுகாப்பு
ஜியாவுர் ரஹ்மான் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது காதலி தன்னு சைனியும் மர்மமான முறையில் உயிரிழந்த செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது. இரு மதங்களை சேர்ந்த காதலர்கள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் அப்பகுதியில் மதப் பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.