கோவையில் திடீரென விலகிய மெட்ரோ ரயில் நிறுவனம்.. நீலாம்பூர் வரை 800 கோடி மேம்பாலம்.. புதிய மாற்றம்
கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைப்பதில் ஜிடி நாயுடு மேம்பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1,700 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் தான் அவினாசி சாலையில் ஏற்பட்டு வந்த நெரிசலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அடுத்தாக கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை ரூ.800 கோடியில் மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனம், நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து செயல்பட முடிவு செய்திருந்த நிலையில், மெட்ரோ நிறுவனம் திட்டத்தில் இருந்து விலகிவிட்டது. இனி தனியாகவே நெடுஞ்சாலை ஆணையம் பாலம் அமைக்க போகிறது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவை கேரளாவின் நுழைவு வாயிலாக மிகப்பெரிய வணிக மையமாகவும் இப்போது இருக்கிறது. கோவையில் சுமார் 30 லட்சம் என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது. கோவை மாநகரம் அடுத்த 10வருடங்களில் அசுர வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன போக்குவரத்தும் எல்லா சாலைகளிலும் கடுமையாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அவினாசி சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வந்தது. கோவையில் உக்கடத்தில் இருந்து கருமத்தப்பட்டிக்கு செல்லவதற்கு மணி கணக்கில் ஆனது.

இதையடுத்து கோவை உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1,700 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாதையில் போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் வாகனங்கள் தற்போது எளிதில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.
எனினும் இந்த மேம்பாலம் கோல்டு வின்ஸ் பகுதியில் இருந்து நீலாம்பூர் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் மக்களுக்கு இந்த பாலத்தால் முழு பயன் கிடைக்கும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள். இதற்கான பணிகள் ரூ.600 கோடியில் நடைபெறும் என்று கடந்த 2024 ஆண்டு நவம்பர் மாதம் கோவைக்கு வருகை தந்த அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதற்கான திட்ட வரைவுகளை மாநில நெடுஞ்சாலைத் துறை தயாரித்து வந்தது. இந்தநிலையில் அவினாசி ரோட்டில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தும் போது, நீட்டிக்கப்படும் மேம்பாலத்துடன் 1.5 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைந்து மேம்பாலத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
ஏனெனில் அவிநாசி சாலையில் மெட்ரோ ரயில்பாதை அமைக்க முன்பு முடிவு செய்யப்பட்டது. மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து நெடுஞ்சாலைத்துறை ஒரே தூணாக அமைத்து மெட்ரோ ரயில், மற்றும் நெடுஞ்சாலை மேம்பாலம் ஆகியவற்றை அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது மெட்ரோ ரயில் திட்டம் கோவையில் தற்காலிகமாக கைவிடப்பட்டிருக்கிறது
ஆனால் மெட்ரோ ரயில் நிறுவனம் நெடுஞ்சாலைத்துறைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்காததால் மேம்பாலம் அமைக்கும் பணி தாமதம் ஆனது. இந்தநிலையில் மெட்ரோ ரயில் நிறுவனம், நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக கடிதம் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மெட்ரோ ரயில் நிறுவனம் விலகியதால், கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை 5.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் அமைக்க முடிவு செய்துள்ளோம். தற்போது திட்ட செலவு அதிகரித்துள்ளதால், ரூ.800 கோடி வரை செலவாகும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான திட்ட மதிப்பீட்டை தயாரித்து, அரசின் ஒப்புதல் பெற்று மேம்பாலம் அமைக்கப்படும். இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டால் தற்போது ஆர்.ஜி.புதூர், நீலாம்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளது தவிர்க்கப்படும். வாகனங்கள் விரைவாக செல்லும் என்றார்கள்.














Click it and Unblock the Notifications