2024 ஜெயிக்கான் நம்மள் ஒருமிச்சு நிக்கணம்.. மலையாளத்தில் பேசி அசத்திய ஸ்டாலின்.. உற்சாக கரகோஷம்!
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசியதும் கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர்.
சென்னை : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது உரையின் தொடக்கத்தில் மலையாளத்தில் பேசி அசத்தினார். அதேபோல உரையின் கடைசியிலும் மலையாளத்தில் பேசினார். இதனால் கேரளாவில் இருந்து வந்திருந்த இஸ்லாமிய மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75-வது ஆண்டு பவள விழா மற்றும் அகில இந்திய மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், பவள விழா மாநாடு நடைபெற்றது. ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் பங்கேற்றனர். கேரளாவில் இருந்து அதிகமானோர் வந்திருந்தனர்.

ஆறரை அடி நினைவுப்பரிசு
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுயர பேனா சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக மெரினாவில் கடலுக்கு நடுவே பிரமாண்ட பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதனை நினைவுபடுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக ஆறரை அடி உயர பேனா வழங்கினார். இதன் கைப்பிடி தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ட ப்ரியப்பட்ட மலையாள பந்துக்களுக்கு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பவள விழாவையொட்டி நடக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உங்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் தந்திருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகிகளுக்கு குறிப்பாக பேராசிரியர் காதர்மொய்தீன் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஈ பரிபாடியில் பங்கெடுக்கான் வேண்டி கேரளத்திலிருந்து வந்துட்டுள்ள என்ட ப்ரியப்பட்ட மலையாள பந்துக்களுக்கும் எண்டே வணக்கம்.

நிச்சயம் வருவேன்
நம்முடைய பேராசிரியர் காதர் மொய்தீன் எப்போது என்னை அழைத்தாலும் அது எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர் அழைத்தால் நான் வராமல் இருந்தது இல்லை. விரைவில் டெல்லியில் நடைபெறவிருக்கக்கூடிய மாநாட்டிற்கு வந்திட வேண்டும் என்று இந்த மாநாட்டில் நம்முடைய பேராசிரியர் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். உறுதியோடு சொல்கிறேன், வருவேன், வருவேன். இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சாத்தியமானவை நிறைவேற்றப்படும். நீண்டகாலமாக சிறையில் உள்ள முஸ்லிம்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக குழு அமைக்கப்பட்டு, பரிந்துரை பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான கோப்பு, விரைவில் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்." என்றார்.

நம்மள் ஒருமிச்சு நிக்கணம்
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் தனது உரையின் முடிவில் மீண்டும் மலையாளத்தில் பேசினார். "மதம் கொண்டு நமக்கிடையே வெறுப்பு புலர்த்தான் நோக்குந்நோர் உண்டு. 2024 எலெக்ஷன் அவரை பாடம் படிப்புகுவானுள்ள அவசரமானு. 2024 ஜெயிக்கான் நம்மள் ஒருமிச்சு நிக்கணம். அதானு நமக்கு விஜையிக்கானுள்ள மார்க்கம். இதனை இந்தியா முழுவண் எத்திக்கணம். நமக்கு ஒருமிச்சு நில்காம், நமக்கு ஜெய்க்காம். ஒன்றிணைவோம். வெற்றி பெறுவோம். திராவிட மாடல் ஆட்சியின் தத்துவங்களை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம்." எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications