சேர்ந்த வேகத்தில் பாஜகவில் இருந்து விலகிய இஸ்லாமியர்கள்.. 12 மணி நேரத்தில் அண்ணாமலைக்கே ‘ட்விஸ்ட்’!
சென்னை: அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் சேர்ந்த இஸ்லாமியர்கள் 12 மணி நேரத்தில் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை. செல்வராஜ், அதிமுக சார்பில் சுர்சித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம் ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் களமிறங்கி உள்ளனர்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். நாகை அவுரி திடலில் பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது நாகூர் பகுதியை சேர்ந்த சமது என்பவர் மேலும் சில இஸ்லாமியர்களோடு பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 12 மணி நேரத்தில் அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த சமுதாயமும், தனது குடும்பமும் பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் சமது. நாகூர் தர்காவில் பரம்பரை ஆதினமாக இருக்கும் சமது, அதிமுகவில் இருந்து, அமமுகவுக்கும், பின்னர் காங்கிரஸ் கட்சிக்கும் மாறினார்.
தேர்தல் சமயத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய நிலையில், தனது குடும்பத்தினரே எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார். தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் தெரிவிக்கப் போகிறாராம்.












Click it and Unblock the Notifications