என் போனை உளவுத்துறை ஒட்டுக்கேட்கிறாங்க! கூடவே ஆள் வச்சு கண்காணிக்கிறாங்க.. அண்ணாமலை பரபர புகார்!
சென்னை: தன்னுடைய தொலைபேசி உரையாடலை தமிழ்நாடு உளவுத்துறை ஒட்டுக் கேட்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வினோத் என்ற நபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

என்ஐஏ
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி என்ஐஏ விசாரணை தேவை. இதற்கு பின் வேறு பெரிய காரணம் இருப்பதாக பாஜக சந்தேகிக்கிறது. தடயவியல் சோதனை நடத்தும் முன்தடயத்தை காவல்துறை அழித்துள்ளது. நீட் தேர்வை பாஜக ஆதரிப்பதால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நகைச்சுவையாக உள்ளது.

பாஜக உறுதி
எங்கள் கட்சி அலுவலகம் மீது நடத்தப்பட்டு உள்ள தாக்குதலுக்கு பின் தேச விரோத சக்திகள் உள்ளன. பாஜகவின் உறுதியை இது போன்ற சம்பவங்கள் தடுக்காது. நாங்கள் தொடர்ந்து மக்களுக்காக களத்தில் இருப்போம். எங்களை ஒதுக்கிவிட முடியாது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மோசமாகி உள்ளது. நாளுக்கு நாள் சட்ட ஒழுங்கு மோசமாகி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக என்னுடைய பாதுகாப்பைக் குறைத்தார்கள். எனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு சட்டென குறைக்கப்பட்டது.

பாதுகாப்பு
'ஒய்' பிரிவிலிருந்து 'எக்ஸ்' பிரிவுக்குக் கொண்டுபோனார்கள். முதலில் பாதுகாப்பை குறைத்தவர்கள் இப்போது என்னை ஆள் வைத்துகண்காணிக்கிறார்கள் . உடனிருக்கும் ஆட்களை வைத்து கண்காணிக்கிறார்கள்.. என்னுடைய வீட்டிற்கும் பாதுகாப்பு இல்லை. ஒரே ஒரு கன் மேன் பாதுகாப்பு மட்டுமே உள்ளது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதையும் எடுத்துவிடுங்கள். எனக்கு கவலை இல்லை. உங்களுக்கு ஏன் இந்த வன்மம் என்று தெரியவில்லை.

கண்காணிப்பு
என்னுடைய தொலைபேசி உரையாடலை தமிழ்நாடு உளவுத்துறை ஒட்டு கேட்கிறது. தமிழ்நாட்டில் உளவுத்துறை காவல்துறை மீது ஆதிக்கம் செலுத்துகிறது. உளவுத்துறை அரசியல் நோக்கம் கொண்டு செயல்படுகிறது. அரசியல் ரீதியாக உளவுத்துறை பாகுபாடு காட்டுகிறது. அரியலூர் மாணவி வழக்கில் உளவுத்துறை தலையீடு உள்ளது.

அபாயம்
என் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது; என்ன பேசினாலும் அது பொது வெளியில் கசிந்துவிடுகிறது. அதை பொது வெளியில் , வாட்ஸ் ஆப்பில் கசியவிடுகிறார்கள். செல்போனில் யாரிடமும் வெளிப்படையாக பேச முடியவில்லை. இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. சில விஷயங்கள் பேசினால் நன்றாக இருக்காது . நான் கோழை கிடையாது. இதற்கெல்லாம் பணிந்து போக வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. இந்த போக்கு அபாயகரமானது, என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications