'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்' நிதி நிறுவன மோசடி! தேவநாதன் சொத்து விவரம் தாக்கல்
சென்னை: மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் இன்று தேவநாதனின் சொத்து விவரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு நிலுவையில் உள்ளது. கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, பாதிக்கபட்டவர்கள் தரப்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும், பாதிக்கபட்ட அனைவரும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவர்கள் தேவநாதன் யாதவ் அரசியல் பின்புலம் மற்றும் பண பலம் கொண்டவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கபட்டது.
நீதிபதி, தேவநாத யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அதன் மூலம் வரும் பணத்தை பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கலாமா? என்பது குறித்தும் அவரின் சொத்துகள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் யாதவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவரின் சொத்துகள் விபரங்களை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து சொத்துகள் தாக்கல் செய்யபட்டதை அடுத்து காவல்துறை மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் தரப்பு பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணை ஏப்ரல் 9 தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications