கொலையா? தற்கொலையா? கழுத்தறுப்பட்ட தம்பதி - மர்மமான முறையில் மரணம் - குரோம்பேட்டை அருகே ஷாக்!
சென்னை: சென்னை குரோம்பேட்டையை அடுத்த ஜமீன் இராயபேட்டையில், கணவர், மனைவி இருவரும், கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சிட்லபாக்கம் காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் இராயபேட்டையில் வசித்து வந்த ஆறுமுகம் என்பவர், அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரின் மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். இந்த தம்பதியர், ஜமீன் இராயபேட்டை பகுதியில், பிள்ளையார் கோவில் 1 முதல் குறுக்கு தெருவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறி தங்கியுள்ளனர்.
இந்நிலையில், தனது தாய் தந்தை இரண்டு நாட்களாக வீட்டுக்கு வராததால் ஆறுமுகத்தின் மூத்த மகள், நேற்று இரவு 10 மணி அளவில் தனது தந்தை வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, கதவை நீண்ட நேரம் தட்டிப் பார்த்தும், கதவை வீட்டில் இருந்தோர் திறக்காததால் சந்தேகமடைந்த ஆறுமுகத்தின் மகள், கதவை உடைத்து பார்த்தபோது வீட்டினுள் தாய் மஞ்சுளா, தந்தை ஆறுமுகம் ஆகியோர் கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆறுமுகத்தின் மூத்த மகள், இந்த சம்பவம் குறித்து சிட்லப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்த தம்பதியர் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த கணவன், மனைவியும் கழுத்தறுக்கப்பட்டு இருந்ததால், இவர்களை யாராவது கொலை செய்தார்களா? அல்லது அவர்களாகவே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,
தந்தையும், தாயும் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்ததைப் பார்த்து, மகள்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவி உயிரிழந்த சம்பவத்தால், ஜமீன் இராயபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.