ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு.. புறக்கணிக்கிறாரா சீமான்?
சென்னை: குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்க சீமானின் நாம் தமிழர் கட்சி முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் 76 வது குடியரசு தின விழா ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். அதன் பின்னர் பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வார்.

தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற உள்ளது. அதே சமயம் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகளுக்குத் தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ.எம்., ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்க சீமானின் நாம் தமிழர் கட்சி முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications