சீமான் விமர்சித்த காளியம்மாள்.. திமுக, தவெக, அதிமுகவுடன் தீவிர பேச்சுவார்த்தை.. விரைவில் க்ளைமாக்ஸ்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள், அக்கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுவிட்டார். இதனையடுத்து ஆளும் திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுடன் காளியம்மாள் தரப்பு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். அடுத்த ஓரிரு நாட்களில் இந்த 3 கட்சிகளில் ஒன்றில் காளியம்மாள் இணைய இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாம் தமிழர் கட்சியில் பெண் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தவர் காளியம்மாள். 2019-ம் ஆண்டு வடசென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு 60,515 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்; 2021-ம் ஆண்டு பூம்புகார் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்; 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் காளியம்மாள்.

ஒட்டிக் கொண்டிருக்கும் பிசிறு என விமர்சித்த சீமான்
அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியில் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் தனக்கான தனி செல்வாக்கை உருவாக்கும் முயற்சிகளையும் காளியம்மாள் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்துதான் சீமான், காளியம்மாளை இழிவாக விமர்சித்தார்., அதில் ஒரு வார்த்தை ஒட்டிக் கொண்டிருக்கும் பிசிறு என்பது. காளியம்மாளை சீமான் கடுமையாக இப்படி விமர்சித்த ஆடியோ வெளியானது முதலே அக்கட்சியில் ஒட்டியும் ஒட்டாமலுமே இருந்து வந்தார். ஒரு சில நிகழ்வுகளில் சீமானுடன் காளியம்மாள் பங்கேற்றார்.
10 நிமிடம்தான் பிரபாகரனை சந்தித்தார் சீமான்
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரை சீமான் வெறும் 10 நிமிடங்கள்தான் சந்தித்தார் என சீமான் முன் வரிசையில் அமர்ந்திருக்க காளியம்மாள் பேசினார். இதற்கு அதே மேடையிலேயே சீமான் பதிலும் கொடுத்தது பெரும் சர்ச்சையானது. இந்த சர்ச்சை பேச்சுக்குப் பின்னர் காளியம்மாள் முற்றிலுமாக நாம் தமிழர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.
சீமானின் கடும் விமர்சனம்
அண்மையில் சீமான் அளித்த பேட்டியிலும் காளியம்மாள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். தனக்கான தனி கூட்டத்தை காளியம்மாள் உருவாக்க முயற்சித்ததாகவும் அந்த பேட்டியில் சீமான் குற்றம்சாட்டி இருந்தார். அதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியும், காளியம்மாள் கட்சியின் முக்கிய நிர்வாகி அல்ல என கூறியிருந்தார்.
எந்த கட்சிக்கு போகிறார் காளியம்மாள்?
இதனிடையே நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவது என முடிவெடுத்துவிட்ட காளியம்மாள் அடுத்து எந்த கட்சிக்கு செல்வது? என்பது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம், அதிமுக ஆகிய கட்சிகளுடன் காளியம்மாள் தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. தற்போது திமுக தரப்புடனும் காளியம்மாள் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறதாம். இந்த மூன்று முனை பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வந்து க்ளைமாக்ஸ் காட்சி அரங்கேறும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications