கைதான காளி.. சீமான் உத்தரவால் உள்ளே வந்த வழக்கறிஞர் டீம்.. ட்ரெண்ட் செய்யும் நாம் தமிழர் கட்சியினர்!
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டு வந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளி என்பவரை தருமபுரியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டம் செல்லியம்பட்டி அருகே உள்ள தகடூர் கிராமத்தை சேர்ந்தவர் காளி என்ற காளியப்பன். இவர் நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இவர், திமுக பற்றியும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றியும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. அண்மையில், காளி தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து மோசமான முறையில் எடிட் செய்யப்பட்டிருந்த படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி காளியை நேற்று நள்ளிரவு தருமபுரியில் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், காளியிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட காளி, விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, ஆகியோர் குறித்தும் அவதூறாக பல்வேறு பதிவுகள் இட்டிருந்ததால் அதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாதக நிர்வாகி காளி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "தம்பி காளி போன்றவர்கள் மீது பழிவாங்கும் நோக்கோடு வழக்குப் பாய்ச்சப்பட்டு, நள்ளிரவில் கைது செய்யப்படுவது அப்பட்டமான அராஜகம்" என இடும்பாவனம் கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாக்கியராஜன், "சீமான் அண்ணன் அறிவுறுத்தலின் பெயரில் தம்பி காளியின் தாயிடம் பேசினேன். எப்படியும் தம்பியை பத்திரமாக மீட்டு தருவோம் என்று அண்ணன் சொன்ன வாக்குறுதியை அந்த வயதான தாயிடம் சொன்னேன். சட்ட ரீதியாக காளியின் விடுதலைக்கான வேலையை வழக்கறிஞர் பாசறை மேற்கொள்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக, திமுக மற்றும் திமுக தலைவர்களை மிகவும் கடுமையாக சமூக வலைதளத்தில் விமர்சித்தும், கிண்டல் செய்தும் வந்த காளி கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து, #JusticeForKali என்ற ஹேஷ்டேக்கை நாம் தமிழர் கட்சியினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதோடு, திமுகவினர் சமூக வலைதளங்களில் இழிவாக எழுதியதாக ஸ்கிரீன்ஷாட்டுகளை பதிவிட்டும் வருகின்றனர்.











Click it and Unblock the Notifications