'புர்கா'வை கழற்ற சொன்னதால் நீட் எழுதாமல் வீட்டுக்கு வந்த மகள்- சீமான் முன்னிலையில் அமீர் ஷாக் தகவல்!
சென்னை: நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்டவைகளில் மத்திய பாஜக அரசுக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது நண்பரும் திரைப்பட இயக்குநருமான அமீர் ஆகியோர் இணைந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் "உயிர் தமிழுக்கு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் - அமீர் கூட்டாக கூறியதாவது: நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால்தான் நீட் தேர்வை நாங்கள் வேண்டாம் என்கிறோம்.

நீட்டை ஆதரித்த பெருமக்கள்தான் இத்தகைய முறைகேடுகளுக்கு பதில் சொல்ல வேண்டும். நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் எத்தனை பேர் பிடிபட்டுள்ளனர் தெரியுமா? ஹெட்போன் வைத்து தேர்வு எழுதியது எல்லாம் தெரியும். வட இந்தியாவில் இப்போது 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படியானால் நீட் தேர்வு போலி மருத்துவர்களை உருவாக்குகிறதா? தரமான மருத்துவர்களை உருவாக்குகிறதா?
இந்திய நாட்டின் தரமான மருத்துவ மாணவர்களை உருவாக்க அமெரிக்காவின் தனியார் நிறுவனத்தை அனுமதிப்பது ஏன்? அமெரிக்காவின் புரோ மெட்ரிக் நிறுவனத்துக்கு என்ன தேவை இருக்கிறது? இந்திய அரசால் ஒரு தேர்வை கூட நடத்த முடியாதா? வட இந்தியாவில் எந்த பெண்ணுடைய மூக்குத்தியையும் நீங்கள் கழற்றுவது இல்லை. ஆனால் என் மாநிலத்தில் தோடு, மூக்குத்தியை கழற்றி விட்டுதான் நீட் தேர்வு எழுதவே அனுமதிக்கிறீர்கள்? இவ்வாறு சீமான் கூறினார்.

இயக்குநர் அமீர் கூறுகையில், 2 ஆண்டுகளுக்கு முன்னர் என் மகள் நீட் தேர்வு எழுதச் சென்றார். அப்போது புர்காவை கழற்றச் சொல்லி இருக்கிறார்கள். இதனை ஏற்க மறுத்து நீட் தேர்வையே எழுதாமல் என் மகள் வீட்டுக்கு வந்துவிட்டார். ஆடை, தோடு, கழுத்தில் இருக்கும் செயின் இவற்றை எல்லாம் கழற்றிவிட்டு தேர்வு எழுது என்பது மனநிலையைப் பாதிக்கக் கூடியது. ஒரு அச்சமூட்டி தேர்வறைக்குள் அனுப்பி வைப்பது.
நாம் தமிழர் சீமான்: 1199 மதிப்பெண் பெற்றவர் நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் அவர் தகுதியற்ற மாணவர்; 800 மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தகுதியான மாணவர் என்கிறீர்கள். அப்படியானால் பிளஸ் டூ மதிப்பெண் எதற்கு? நேரடியாகவே நீட் தேர்வு வைத்துவிட்டுப் போகலாம்தானே? அப்படியே நீட் தேர்வில் தேர்ச்சி எழுதி பாஸ் செய்துவிட்டு கல்லூரிக்குப் போகும் எனக்கு பாடம் நடத்துகிற பேராசிரியர் நீட் தேர்வில் பாஸ் செய்தவரா? எனில் இல்லை. பழைய பேராசிரியர். பாடத் திட்டத்தில் மாற்றம் இருக்கிறதா? எதுவும் இல்லை. என்ன இது? அதே பாடத் திட்டம், அதே பேராசிரியர்.. அப்புறம் எப்படி தரமான மருத்துவர் உருவாக முடியும் என சொல்கிறீர்கள்?

இயக்குநர் அமீர்: நீட் தேர்வை தனியார்தான் நடத்துகிறது. அதை யாராவது கேள்வி கேட்கிறீர்களா? தேர்வை நடத்துவது அமெரிக்க நிறுவனம். கோச்சிங் சென்டரும் தனியாருடையது.
நாம் தமிழர் சீமான்: நீங்கள் பயன்படுத்துகிற வாக்குப் பதிவு இயந்திரத்தை தயாரிப்பதும் ஜப்பான். எதைத்தான் நீங்க செய்யுறீங்க? இயந்திரம் அவன் தயாரிப்பான்.. தேர்தலை மட்டும் நீங்க நடத்துவீங்க? இவ்வாறு சீமான், அமீர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications