எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? குறையை தவிர எதையும் சொல்ல முடியாத ஆட்சியா? சீமான் ஆவேசம்!
சென்னை: சென்னையில் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது தான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? குறையைத் தவிர எதையும் சொல்ல முடியாத ஆட்சியா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 60 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றும் வகையிலும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான முன்னுரிமை மற்றும் பதவி உயர்வை பாதிக்கும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 243-ஐ திரும்பப் பெற வேண்டுமென வவலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சென்னை டிபிஐ வளாகத்தின் முன்பாக இன்று முதல் 31ம் தேதி வரை மூன்று நாட்கள் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிபிஐக்கு வருகை தந்த ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அது மட்டும் அல்லாமல் திருச்சி, மதுரை, கோவை , நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் திமுக அரசு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் பெருமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவித்து, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தரவேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? குறையைத் தவிர எதையும் சொல்ல முடியாத ஆட்சியா?
ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243ஐ கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்ய வேண்டும், உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் தொடக்கக்கல்வி ஆசிரியர் பெருமக்களைக் கொடுங்குற்றவாளிகள் போல கைது செய்யும் திமுக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைத்தானே ஆசிரியர் பெருமக்கள் நிறைவேற்றக் கோருகிறார்கள்? ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் அதைக்கூட திமுக அரசால் நிறைவேற்ற முடியாதா? உரிமை கேட்டு அமைதிவழியில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையாகும்.
அதைக்கூட அனுமதிக்க மறுப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? கருத்துரிமையைக் காலில் போட்டு மிதித்து, போராடும் ஆசிரியர்களை சமூக விரோதிபோலக் கைது செய்வதுதான் சமூகநீதி அரசா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? திமுக அரசு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் பெருமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவித்து, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தரவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications