'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்!
சென்னை: திமுக ஆட்சியின் போது மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, மாணவர்களிடையே அதிக விழிப்புணர்வு செய்யப்பட்ட திட்டம் 'நான் முதல்வன்'. இந்த திட்டத்தில் தற்போது அதிரடியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் பக்கங்களில் பழைய அடையாளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமாக முன்னெடுக்கப்பட்ட 'நான் முதல்வன்' என்ற பெயர், தற்போது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் பெயர் தற்போது 'TN Skill Corporation' என்று மாற்றப்பட்டுள்ளது.

கணக்கின் முகப்புப் படம் மற்றும் முகப்புப் பேனர் ஆகியவையும் முந்தைய அரசின் விளம்பரங்கள் நீக்கப்பட்டு, புதிய பாணியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. வெறும் பெயர் மாற்றத்தோடு மட்டும் நிறுத்தாமல், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் குறித்துப் பதிவிடப்பட்ட அனைத்துப் பழைய தரவுகளும் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அப்போதைய அமைச்சர்கள் கலந்துகொண்டு 'நான் முதல்வன்' திட்டத்தைத் தொடங்கி வைத்த வீடியோக்கள், மாணவர்களுடனான உரையாடல்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் எக்ஸ் பக்கத்தில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. இதனை திறன் மேம்பாட்டுத் திட்டமாக தொடரவே பழைய அரசியல் விளம்பரப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முந்தைய அரசின் திட்டப் பெயர்களை மாற்றுவதும், அவர்களின் சாதனைகளைப் புதிய அரசு புறக்கணிப்பதும் தமிழ்நாட்டு அரசியலில் வழக்கமான ஒன்றுதான். ஆனால் மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திட்டத்தின் டிஜிட்டல் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் முழுமையாக நீக்கப்பட்டிருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான் முதல்வன், மாணவர்களுக்கான இதழ் உள்ளிட்ட திட்டங்கள் மாணவர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இது சாமானிய மக்களிடையே பெரியளவில் எடுத்து செல்லப்படவில்லை என்றாலும், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருந்து வந்தது. எதிர்காலத்தில் நான் முதல்வன் திட்டத்தின் வளர்ச்சி மிகப்பெரியளவில் இருக்கும் என்று கருதப்பட்டது.
இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் வழிக்காட்டுதல் அளிக்கப்பட்டு வந்தது. அதேபோல் யுபிஎஸ்சி படிக்கும் ஏராளமான மாணவர்களுக்கு மிகப்பெரிய பலனை இந்தத் திட்டம் கொடுத்தது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 50க்கும் அதிக மாணவர்கள் பலன் அடைந்தனர். இப்படி முக்கியமான திட்டத்தின் பெயரை மாற்றுவது சரியானதா என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications