தவெக உடன் பாஜக கூட்டணி? சிரித்துக்கொண்டே நயினார் நாகேந்திரன் சொன்ன பதில்!
சென்னை: அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்புள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும் என நழுவினார் நயினார் நாகேந்திரன். விஜய் உங்களுடைய கூட்டணிக்கு வந்தால் இணைத்துக் கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சிரித்துக் கொண்டே 'பார்ப்போம்' என்று பதிலளித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக அரசியலில் தவெக கட்சி கரூர் சம்பவத்திற்கு பிறகு காணாமல் போன நிலையில் உள்ளதைப் போல் கேட்கிறீர்கள். கரூர் சம்பவத்திற்கான காரணத்தைத்தான் பார்க்க வேண்டும். அந்த நிகழ்வில், அந்த கட்சி தலைவர் விஜய்யின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?

அவர் 10 ரூபாய் வசூல் தொடர்பாக விமர்சனம் செய்தபோதே செருப்புகள் வீசப்பட்டது. எனவே அவருடைய பாதுகாப்பு குறித்தும் நாம் யோசிக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் உள்ளோம். நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும்' என்று தெரிவித்தார்.
மேலும், அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்புள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதுபற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து, விஜய் உங்களுடைய கூட்டணிக்கு வந்தால் இணைத்துக் கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சிரித்துக் கொண்டே 'பார்ப்போம்' என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார் நயினார் நாகேந்திரன்.
முன்பு நயினார் நாகேந்திரன் பேசுகையில், "விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்து பிரசாரத்தை ஆரம்பித்து இருக்கிறார். அவருடைய நோக்கமும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றுவது தான். தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. இப்போது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். புதிதாக கட்சி ஆரம்பித்தால் வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருவார்கள். தேர்தல் காலத்தில் ஓட்டு எவ்வளவு வாங்குவார் என்பது தான் முக்கியம். இன்று பார்க்க வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது" எனக் கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications