நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்! பாஜக கூட்டணியில் மேலும் ஒரு கட்சியாமே! அதுவாக இருக்குமா?
சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று மாலை 4 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். நேற்றைய தினம் சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர் தற்போது டெல்லி சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் ஒரு கட்சியை சேர்ப்பது குறித்து நேற்று எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படும் நிலையில் அது குறித்து மேலும் பேச பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க செல்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது கூட்டணியில்லாமல் இருப்பது பாமகவும் தேமுதிகவும்தான். பாமகவில் உள்கட்சி பிரச்சினை நடக்கிறது. இதனால் அன்புமணி அணி பாஜக கூட்டணியில் இணைகிறதா என தெரியவில்லை. ஒரு வேளை தேமுதிக, பாஜகவுடன் கூட்டணி செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. அதிமுக ராஜ்யசபா சீட் தருவதாக முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா பேசியிருந்ததாக சொல்லப்பட்ட நிலையில் திடீரென பல்டி அடித்து தான் அப்படி சொல்லவே இல்லை என தெரிவித்திருந்தார்.
சிபி ராதாகிருஷ்ணன்
குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் அந்த பதவியிலிருந்து விலகியதும் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களிப்பு முறையில் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வாழ்த்துச் சொல்வதற்காக கடந்த 16ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தார்.
செங்கோட்டையன் போர்க் கொடி
அங்கு ராதாகிருஷ்ணனை சந்திப்பதற்கு முன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்தி போர்க்கொடி உயர்த்தியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்தது பல்வேறு வியூகங்களை கிளப்பியது.
என்ன விஷயம்
இந்த நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் ஒரு மணி நேரமாக ஆலோசனை செய்திருந்தனர்.
மரியாதை நிமித்தம்
இதையடுத்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது, எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அவர் அமித்ஷாவுடன் என்ன பேசினார் என்பதை நாங்கள் ஆலோசிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
டெல்லி சென்ற நயினார்
இந்த நிலையில் இன்றைய தினம் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், "இன்று இரவு ஜே.பி. நட்டாவை நயினார் சந்திக்கிறார். அப்போது அடுத்த மாதம் நயினார் தொடங்கவிருக்கும் சுற்றுப்பயணம் குறித்து ஆலோசனை நடத்துவார்.
என்ன தகவல்
மேலும் கூடுதல் தகவலாக, பாஜக கூட்டணியில் தமிழகத்தை சேர்ந்த ஒரு கட்சியை இணைக்க நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமியிடம் நயினார் ஆலோசனை நடத்தியிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நட்டாவுடன் ஆலோசனை
அது குறித்தும் நட்டாவுடன் நயினார் ஆலோசனை நடத்தலாம்" என அந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. அதன்படி பார்க்கும் போது அந்த கட்சி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. தவெகவாக இருக்குமா என்றால், அந்த கட்சியின் தலைமையில்தான் கூட்டணி என விஜய் சொல்லிவிட்டார். அவர்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்துவிட்ட நிலையில் அக்கட்சி கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை.
நாம் தமிழர்
நாம் தமிழர் சீமான், தான் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே தனித்து போட்டி என்றுதான் கூறி வருகிறார். எனவே அவரும் odd man out ஆகிறார். ஒரு வேளை பாமக, தேமுதிகவா என்ற கேள்வி எழுகிறது. இல்லாவிட்டால் டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் சேர்க்க திட்டமா என்ற ஆங்கிளிலும் யோசிக்க வேண்டியுள்ளது. எதுவாக இருந்தாலும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications