திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழா..ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு! நயினார் காட்டம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அங்குள்ள தர்காவில் சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மதம் நல்லிணக்கமாக என விமர்சித்துள்ளார்.
புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி மதுரை மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் மதிய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் விவகாரம்
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் விதிமுறைகளோடு விழா நடத்த அனுமதிக்கப்பட்டது. இதை அடுத்து நேற்று முன்தினம் அங்கு விழாவுக்கு ஏற்பாடுகளை தர்கா நிர்வாகம் மேற்கொண்ட நிலையில் கோட்டை தெருவை சேர்ந்த பொதுமக்கள் பெண்கள் அங்கு தங்களையும் அனுமதிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதைத் தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சந்தனக்கூடு விழா
இந்நிலையில் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்துவிட்டு சந்தனக்கூடு விழாவுக்கு அனுமதிப்பதா என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக தலைவரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா? உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றவிடாமல் தடுத்துவிட்டு, அதே மலையின் மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ள திமுக அரசின் இந்துமத வெறுப்பு கடும் கண்டனத்திற்குரியது.
நயினார் நாகேந்திரன் கண்டனம்
இந்துக்களின் நம்பிக்கைகள் என்பதையும் தாண்டி தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளைத் திமுக அரசு திட்டமிட்டு பறித்துள்ளதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. மத்திய பாதுகாப்புப் படையினருடன் குறிப்பிட்ட சிலர் மட்டும் மலைமீது சென்று தீபமேற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்துவிடும் என மிகைப்படுத்தி நீதிமன்ற உத்தரவையும் மீறி தடை உத்தரவு பிறப்பித்த திமுகவின் ஏவல்துறை, நேற்று இரவோடு இரவாகத் திருப்பரங்குன்ற மலையின் மீதுள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவிற்காகக் கொடியேற்றுவதற்கு மட்டும் எப்படி பாதுகாப்பு அளித்தது? வாக்கு வங்கிக்காகத் திமுக தலைவர்கள் முன்னெடுக்கும் பிளவுவாத அரசியலில் அரசு அதிகாரிகளும் பங்குதாரர்களாக மாறிவிட்டனரா?
திமுக மீது விமர்சனம்
இஸ்லாமிய சகோதரர்கள் அவர்களின் விழாக்களைக் கொண்டாடுவதில் இந்துக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை, இந்துக்கள் திருப்பரங்குன்ற மலைமீது தீபமேற்றுவதில் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்புமில்லை. ஆனால், திருவிழாவில் கைகலப்பு ஏற்பட்டால் திருடனுக்குக் கொண்டாட்டம் என்பது போல அமைதியாக நடக்க வேண்டிய அவரவர் மத விழாக்களில் திமுக எதற்கு உள்ளே புகுந்து குட்டையைக் குழப்புகிறது? சகோதரத்துவத்துடன் பழகிவரும் இரு சமூகத்தினரிடையே எப்படியாவது மதக்கலவரம் வரவேண்டும், அதை வைத்து அடுத்த முறை அரியணை ஏற வேண்டும் என்ற தீய எண்ணமா?" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications