நல்லகண்ணுவின் கடைசி ஆசை நிறைவேறுகிறது! இறுதி வரை குறையாத பொதுநலம்.. அவரது உடலுக்கு அரசு மரியாதை
சென்னை: இந்திய அரசியலின் எளிமைக்கும் நேர்மைக்கும் அடையாளமாக திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு காலமான செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.. இன்று அவரது விருப்பப்படியே அவரது உடல், அரசு பொது மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது..
சுதந்திர போராட்ட தியாகியான மூத்த தோழர் நல்லகண்ணு நேற்று உயிரிழந்தார்.. தனது 101-வது வயதில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 1:55 மணியளவில் உயிர் பிரிந்தது..

நல்லகண்ணு உடல்நிலை
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி சிறுநீரக கோளாறு, ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.. கடந்த 23-ம் தேதி முதல் அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், முக்கிய உடலுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கின..
டாக்டர்களின் இடைவிடாத கண்காணிப்பில் இருந்தபோதிலும், மருந்துகளுக்கு உடல் ஒத்துழைக்காத சூழலில் அவரது மறைவு நிகழ்ந்தது..
இரங்கல் - கண்ணீர் அஞ்சலி
நல்லகண்ணுவின் மறைவுக்குப் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ரவி மற்றும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.. அவரது பொதுவாழ்வைப் பெருமைப்படுத்தும் விதமாக, நல்லகண்ணுவின் மறைவுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்..
தற்போது அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது..
அரசியல் கட்சியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..
தானம் - ஒப்புதல் கடிதம்
எளிமையின் சிகரமாக வாழ்ந்த நல்லகண்ணு, தனது மறைவுக்குப் பின்பும் சமூகத்திற்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், 2016-ம் ஆண்டிலேயே தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்குத் தானம் செய்ய ஒப்புதல் கடிதம் அளித்திருந்தார்.. அவரது விருப்பத்தை ஏற்று குடும்பத்தினரும் அதற்கு முழு சம்மதம் தெரிவித்துள்ளனர்..
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3:00 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி நடைபெறும்.. அதன் பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சென்னை சென்ட்ரலில் உள்ள MMC சென்னை மருத்துவக் கல்லூரிக்கு முறைப்படி தானமாக வழங்கப்பட உள்ளது..
தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகப் போராடிய ஒரு மகத்தான தலைவர், மறைவிற்குப் பிறகும் மருத்துவ மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்காகத் தன் உடலையே அர்ப்பணிப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..!!!












Click it and Unblock the Notifications