நங்கநல்லூர் தீர்த்தவாரியின்போது 5 அர்ச்சகர்கள் இறந்தது ஏன்? போலீஸில் அனுமதி பெறாததே காரணமா?
சென்னை: தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்த போலீஸாரிடம் கோயில் நிர்வாகம் அனுமதி பெறாததே விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
சென்னை நங்கநல்லூரை அடுத்த மூவலரசம்பட்டியில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி இன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கோயில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு கோயிலாகும். இந்த நிலையில் இந்த கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக 25 அர்ச்சகர்கள் உற்சவ மூர்த்திகளுடன் குளத்தினுள் இறங்கினர்.

தீர்த்தவாரி
பொதுவாக தீர்த்தவாரியின் போது மூன்றுமுறை உற்சவ மூர்த்திகளை மூழ்க வைக்க வேண்டும். அதோடு அர்ச்சகர்களும் மூழ்கி எழுந்திருப்பர். அது போல்தான் 20 அடி ஆழ குளத்தில் இடுப்பளவு தண்ணீர் இருக்கும் பகுதியினுள் அர்ச்சகர்கள் உற்சவ மூர்த்திகளுடனும் அபிஷேக பொருட்களுடனும் இறங்கினர். அப்போது அவர்கள் ஒன்றாக இரு முறை முங்கி எழுந்தனர்.

மூன்றாவது முறை
மூன்றாவது முறை மூழ்கி எழும் போது ஒரு அர்ச்சகரின் கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டது. அவரால் எழ முடியாமல் கைகளால் தண்ணீரால் அடித்தபடியே தத்தளித்தார். உடனே தண்ணீரில் மூழ்கினார். இதனால் அருகே இருந்த 4 அர்ச்சகர்கள் அவரை காப்பாற்ற முயன்று அவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.

கோயில் நிர்வாகத்தினர்
உடனே கோயில் நிர்வாகத்தினர் தீயணைப்புத் துறையினருக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை தேடும் பணியின் போது ராகவன், லோகேஸ்வரன், பானேஷ், சூர்யா ஆகிய 4 பேரின் உடல்கள் கிடைத்தன. இதையடுத்து மேலும் ஒருவரின் உடல் சிறிது நேரத்தில் மீட்கப்பட்டது.

3 பேர்
இதில் 3 பேர் நங்கநல்லூரை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கீழ்க்கட்டளையைச் சேர்ந்தவர் என்றும் இன்னொருவர் மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் இருவர் கல்லூரி மாணவர்கள், மீதமுள்ள 3 பேர் பணியாளர்கள். இதையடுத்து சடலங்கள் மீட்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைவருமே 25 வயதுக்குள்பட்டவர்கள்.

தீர்த்தவாரி நிகழ்ச்சி
இந்த சம்பவம் குறித்து சிலர் கூறுகையில் இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு காவல் துறையினரிடமும் தீயணைப்புத் துறையினரிடமும் அனுமதி வாங்கவில்லை. மேலும் பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை. இதனால்தான் இந்த அசம்பாவித சம்பவங்கள் நடந்ததாக கூறுகிறார்கள். மேலும் இது போல் இனி நிகழாத வண்ணம் விழாக்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications