நாஞ்சில் சம்பத்.. அப்படியே மயங்கி விழுந்துட்டாரு.. சுயநினைவே இன்னும் திரும்பலயாம்.. ஐசியூவில் அட்மிட்
நாஞ்சில் சம்பத் உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சென்னை: தமிழக அரசியலில் மூத்த தலைவரும், திராவிட இயக்கப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் திடீர் உடல்நலக்குறைவினால் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... சுயநினைவின்றி உள்ள அவருக்கு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை நடந்து வருவதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மேடைகளில் சரமாரியாக பலரையும் விமர்சிப்பார்.. யாருக்கும் பயப்படவே மாட்டார்.. அரசியல், இலக்கிய மேடைகளையும் தாண்டி சினிமாவிலும் நடிகராக இருப்பவர் நாஞ்சில் சம்பத்.
இவரது திருமணம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நடந்தது... திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்று மதிமுகவைத் தொடங்கியபோது, அதில் இணைந்து மதிமுகவின் பிரச்சார பீரங்கியாக வலம்வந்தவர் நாஞ்சில் சம்பத்..
அதிமுக பொருட்டல்ல, திமுகவுடன் தான் நேரடி போட்டி... நாஞ்சில்சம்பத் பொளேர் பேட்டி! Exclusive
வைகோ கட்சி
மதிமுகவின் முக்கிய தூண்களில் ஒன்றாக திகழ்ந்தவர்.. மிகப்பெரிய அஸ்திரவாரத்தை தன் அனல்கக்கும் பேச்சினாலேயே விதைத்தவர்.. அதற்கு பிறகு, மதிமுகவில் இருந்து விலகி, அதிமுகவுக்கு சென்றார்.. 2012ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அங்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். தினகரன் அமமுகவை ஆரம்பித்த நிலையில் அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லை எனக் கூறி கட்சியில் சேரவில்லை..
"பொறுக்கிகள்"
இறுதியில் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்ட நாஞ்சில் சம்பத், திமுக மேடைகளில் ஐக்கியமாகிவிட்டார்.. இப்போது திராவிட இயக்கப் பேச்சாளராக தமிழகம் முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.. இவரது பேச்சினால் பலமுறை பாஜகவினர் கொந்தளித்து, நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட முயன்ற நிகழ்வுகள் ஏராளனம்.. அவ்வளவு ஏன், ஈரோட்டில் கடந்த மாதம்கூட ஒரு சம்பவம் நடந்தது. ஒரு டிவி சேனல் சார்பில் விவாத நிகழ்ச்சி நடந்தபோது, அதில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத், பாரதிய ஜனதா கட்சியினரை பொறுக்கிகள் என்று குறிப்பிட்டு பேசிவிட்டார்..
அட்மிட் ஆனார்
இதனால், அந்த அரங்கத்திலேயே மிகப்பெரிய கூச்சலும், ரகளையும் நடந்தது.. இத்தனைக்கும் அதே மேடையில், நாஞ்சில் சம்பத், பாஜகவின் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.. நாஞ்சில் சம்பத்துக்கு ஏதோ ஆகிவிட்டது, என்னென்னமோ பேசிவருகிறார் என்று அதிமுக சார்பிலும் போலீசில் புகார் தரப்பட்டது.. அந்த அளவுக்கு பரபரப்பை தன் பேச்சால் கிளப்பி வருபவர் நாஞ்சில் சம்பத். இவருக்கு தற்போது திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது..
கான்ஷியஸ்
நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். அவரது உறவினர்கள் அவரை நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், நாஞ்சில் சம்பத்திற்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என்கிறார்கள்.. அதேசமயம், நாஞ்சில் சம்பத் உடலுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து இதுவரை மருத்துவமனையில் இருந்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியிடவில்லை..
நரம்பு வெடித்தது
அதிமுகவில் இருந்தபோதும், இப்படித்தான் ஒருமுறை மூளையில் நரம்பு வெடித்து சுயநினைவின்றி நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் இருந்தார் நாஞ்சில் சம்பத்.. இந்த விஷயம் தெரிந்ததுமே அப்போது ஜெயலலிதா அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறச் செய்தார்.. இப்போது மீண்டும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ரயிலிலேயே
கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்னைகள் இருந்துவந்ததாக கூறப்படும் நிலையில், அதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்ததாக தெரிகிறது.. நேற்று சென்னையிலிருந்து ரயில் மூலம் நாகர்கோவிலுக்கு வந்ததுமே, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.. அத்துடன் மயக்கமும் அடைந்துள்ளார்.. இதற்கு பிறகு, ரயிலிலேயே திருவனந்தபுரம் சென்றதாக தெரிகிறது... இன்று காலை வரை அவருக்கு மயக்கம் தெளியவில்லை.
அட்மிட்
இதையடுத்து, அவரின் குடும்பத்தினர் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் (Cosmopolitan) சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். பிறகு, நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் செயல்படும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்... நாஞ்சில் சம்பத்தின் மகனும், மருத்துவருமான சரத்பாஸ்கர் துணையுடன் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்... அவரின் உடல்நிலை சீராக மூன்று நாள்கள் ஆகும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
மூளை ரத்தவோட்டம்
டாக்டர்கள் அவரை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ள நாஞ்சில் சம்பத்திற்கு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சற்று குறைவாக உள்ளதாகவும் சர்க்கரை நோயின் அளவு அதிகமாக உள்ளதாகவும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.. ஆனால், நேற்று அவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்ததைவிட, உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் ஆனால் இன்னும் மயக்க நிலையிலேயே இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.