கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் ஷாக்.. ரூ.70 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் சிக்கியது.. பரபர தகவல்
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.7 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொலை தூரங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இருந்தே இயக்கப்படுவதால், இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதும்.

இந்த நிலையில், தான், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவரிடம் விசாரணை நடத்தியதில் அவரிடம் 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்வர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மான் மற்றும் இப்ராஹிம், மன்சூர் ஆகியோர் என தெரியவந்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு நாடுகளிடம் பெறப்பட்ட போதைப்பொருளை ராமநாதபுரம் எடுத்து சென்று அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் அளித்த தகவலின் அடிப்படையில் செங்குன்றம் அருகே உள்ள குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சென்னை கிளாம்பாக்கத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்ப்டுத்தியது.












Click it and Unblock the Notifications