நத்தம் நில கிரையப் பத்திரம் மட்டும் இருந்தால் போதாது.. வங்கி கடன் வாங்க "செக்"! தப்பிக்க வழி இதுதான்
சென்னை: தமிழகத்தின் கிராமப்புறங்களில் காலம் காலமாக வசித்து வரும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தோடு பிணைந்திருப்பதுதான் 'கிராம நத்தம்' நிலங்கள். ஒரு காலத்தில் ஊர் குடியிருப்பிற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலங்கள், இன்று சட்ட ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்த வகை நிலத்தின் உரிமைகள் மற்றும் அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்களை பற்றி இங்கே சுருக்கமாக காண்போம்...!!
கிராம நத்தம் என்பது அடிப்படையில் மக்களுக்காக குடியிருப்பிற்காக ஒதுக்கப்பட்ட வருவாய்த் துறை வகைப்பாட்டிலான நிலம். பல தலைமுறைகளாக ஒரு குடும்பம் அங்கே வசித்து வந்தாலும், அவர்கள் கையில் முறையான நத்தம் பட்டா இல்லையென்றால் அந்த நிலத்தின் முழுமையான உரிமை அவர்களுக்கு சேருவதில்லை..

நத்தம் பட்டா நிலங்கள்
வருவாய்த்துறைப் பதிவேடுகளில் வெறும் 'நத்தம்' என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலங்களை, தனிநபர் பெயருக்கு மாற்றக் கோரும்போது பல நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன.. குறிப்பாக, அந்த நிலத்தில் வசிப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லையெனில், பட்டா பெறுவது ஒரு தீராத போராட்டமாகவே மாறிவிடுகிறது.
விவசாய நிலங்களை விற்பனை செய்வது போல கிராம நத்தம் நிலங்களை எளிதாக விற்றுவிட முடியாது. நத்தம் நிலத்தை வாங்குபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கிரைய பத்திரம்
முறையான பட்டா இல்லாத பட்சத்தில், வெறும் கிரையப் பத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிலத்தை வாங்குவது பிற்காலத்தில் வில்லங்கங்களை உருவாக்கும். குறிப்பாக, அந்த நிலம் 'நத்தம் புறம்போக்கு' என்று வகைப்படுத்தப்பட்டிருந்தால், அந்த வகைப்பாட்டில் அரசு சட்டபூர்வ அதிகாரத்தின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புண்டு. எனவே, ஆவணங்களைச் சரிபார்ப்பது இதில் மிக முக்கியமான கட்டமாகும்...!
தெருக்கள், மந்தைகள்
கிராம நத்தத்தில் வீடுகள் கட்டுவதற்கு இடமுண்டு என்றாலும், தெருக்கள், மந்தைகள் போன்ற பொதுப் பயன்பாட்டு இடங்களை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. பல இடங்களில் பொது இடங்களை வீட்டு மனைகளாக மாற்றி ஆக்கிரமிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகள், "நத்தம் நிலம் என்பது குடியிருப்பிற்காக ஒதுக்கப்பட்ட பகுதி மட்டுமே, பொதுப் பயன்பாட்டு இடங்களை ஆக்கிரமிக்க யாருக்கும் உரிமையில்லை" என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பல நேரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன...!
வங்கி கடனுக்கு சிக்கல்?
நத்தம் நிலத்தில் வீடு வைத்திருப்பவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் வங்கி கடன் பெறுவதாகும். பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் நத்தம் பட்டாவை ஒரு வலுவான பிணையாக ஏற்கும் விஷயத்தில் இடம்தோறும் வேறுபட்ட அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றன.
நிலத்தின் வகைப்பாடு 'கிராம நத்தம்' என்று இருக்கும்போது, அதன் சந்தை மதிப்பு மற்றும் சட்டபூர்வமான பாதுகாப்பு குறித்து வங்கிகள் ஆய்வு செய்கின்றன. இதனால் ஏழை மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் வீடு கட்டவோ அல்லது தொழிலுக்காகக் கடன் பெறவோ முடியாமல் தவிக்கும் சூழல் நிலவுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், கிராம நத்தம் நிலங்கள் என்பது மக்களின் சொத்து என்றாலும், அதைச் சுற்றியுள்ள சட்ட விதிகளை சரியாகப் புரிந்துகொண்டு பட்டா உள்ளிட்ட ஆவணங்களை சரியாக வைத்திருப்பது மட்டுமே எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும். இத்தகைய சிக்கல்களை அரசு எளிமைப்படுத்தினால் மட்டுமே சாமானிய மக்களின் நில உரிமை முழுமை பெறும் என்கிறார்கள் நிபுணர்கள்...!!












Click it and Unblock the Notifications