"ஒரிஜினாலிட்டி திமுக".. அவருக்கு ராசியும் இல்லை.. இஷ்டமும் இல்லை.. நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேச்சு
நத்தம் விஸ்வநாதன், ஈவிகேஎஸ்இளங்கோவனை ராசியில்லாதவர் என விமர்சித்துள்ளார்
சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில் திமுகவினர், ஜனநாயகத்தை நம்பாமல், பணநாயகத்தை மட்டும் நம்பி தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்று மூத்த தலைவரும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க போகிறது.. திமுக கட்சியானது, தன்னுடைய கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்குவதாக தெரிவித்து உள்ளது..
காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். மேலும், இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் திமுக இப்போதே களத்தில் தீவிரமாக குதித்துவிட்டது..
உறுதியாக சொன்ன டிடிவி தினகரன்.. ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் அமமுகவை ஆதரிப்பாரா? அப்போ பாஜக? குழப்பம்!
வைகோ சபாஷ்
திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் காங்கிரஸ் கட்சி, தங்களுக்கான ஆதரவை பல்வேறு கட்சிகளிடம் கோரி வருகிறது. அவருக்கு விசிக, மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யமும் முன் வந்து, நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியே அபார வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் முதல் இரா.முத்தரசன் வரை உறுதியாக சொல்லி வருகிறார்கள்.. அதன்படியே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
லக்கி கிடையாது
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலுக்கு ராசி இல்லாதவர் என்றும், போட்டியிட விருப்பம் இல்லாத ஈவிகேஎஸ் இளங்கோவனை வலுக்கட்டாயமாக தேர்தலில் நிற்க வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள வெள்ளோடு கிராமத்தில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் மாவட்ட இளைஞரணி செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்றது.
நத்தம் பளிச்
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் கழக துணை பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதன் கலந்துகொண்டு மொழி போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்... இந்த நிகழ்வில், திமுகவில் இருந்து 30க்கும் மேற்பட்டோர், நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசியபோது, "முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாத ஈவிகேஎஸ் இளங்கோவனை வலுக்கட்டாயமாக தேர்தலில் நிற்க வைத்துள்ளார்.. இளங்கோவன் தேர்தலுக்கு ராசி இல்லாதவர்.
ஒரிஜினாலிட்டி
இப்போது திமுகவினர் ஜனநாயகத்தை நம்பாமல், பணநாயகத்தை மட்டும் நம்பி தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.. திமுக அமைச்சர்கள் கிழக்கு ஈரோடு பகுதியில் பண பட்டுவாடாவில் ஈடுபட்டும் வருகிறார்கள்.. திமுகவுக்கென்று ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கிறது... வன்முறை, பழிவாங்கும் எண்ணம், இதெல்லாம் அவர்களுக்க கைவந்த கலை. திமுக-வினர் ஜனநாயகத்தை நம்பவில்லை பணநாயகத்தைத் தான் நம்புகிறது... ஸ்டாலினுக்கு நிர்வாக திறமை கிடையாது... தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்தாடுகிறது" என்றார் நத்தம் விஸ்வநாதன்.
மாய தோற்றம்
2 நாட்களுக்கு முன்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நத்தம் விசுவநாதன் கலந்துகொண்டு பேசினார்.. அப்போது, "இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெறும். அதிமுக இரண்டாக பிளவுபட்டு இருப்பதுபோல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். 95% அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம்தான் இருக்கிறார்கள்.. நாங்கள்தான் அதிமுக என்று சொல்லிக் கொண்டு, பேப்பர் அறிக்கையை மட்டும் வைத்து அரசியல் செய்பவர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து நிற்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய மரியாதை என்னவென மக்கள் தெரிய வைப்பார்கள். திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு அந்தக் கட்சிக்கு வெண்சாமரம் வீசுவோர்களுக்கு இந்த இடைத்தேர்தல் தக்க பாடம் புகட்டும்" என்று ஓபிஎஸ்ஸை மறைமுகமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.