தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெருமைக்குரிய இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்கும் வாழ்த்துக்கள்
தேசிய பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை: தேசிய பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட வேண்டிய அவசியம், வரலாறு குறித்து தெரிந்து கொள்வோம்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் தேவதைகள் நடமாடுவதாக ஐதீகம். பெண்குழந்தை பிறந்தாலே மகாலட்சுமி பிறந்து விட்டதாகவே நினைத்து பலரும் கொண்டாடுகின்றனர். பெண் குழந்தைகளின் அருமை தெரியாதவர்கள்தான் பிறந்த உடனே கொல்வதும், அதை வீதியில் வீசியும் செல்கின்றனர்.
அமராவதி ஆற்றில் 6 பேர் இறப்புக்கு காரணமே இதுதான்.. திமுக மீது ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கை
இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண்கள் தினமாக கொண்டாடுகின்றனர்.
மோடி வாழ்த்து
தேசிய பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களைப் பதிவிட்டுள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய பெண் குழந்தைகள் தினம் என்பது நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கும், பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும். பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகளின் முன்மாதிரியான சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் இது உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
சக்தியை வலுப்படுத்த முன்னுரிமை
எங்கள் அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வளர்ச்சி முயற்சியிலும், பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கும், நமது பெண்களின் சக்தியை வலுப்படுத்துவதற்கும் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு கண்ணியம் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்வதில் எங்கள் கவனம் உள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "பிரதமர் மோடி, பெண்கள் மேம்பாடு பற்றிய சிந்தனையை பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான தீர்மானமாக மாற்றி வாய்ப்புகளின் கதவுகளைத் திறந்தார். இன்று நாட்டின் மகள்கள் ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் பெயரை ஒளிரச் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 'தேசிய பெண் குழந்தைகள் தினத்தில்', நாட்டின் பெருமைக்குரிய இந்தியாவின் ஒவ்வொரு மகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
முத்திரை பதித்த பெண்கள்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், "உறுதியுடனும், திறமையுடனும், லட்சியத்துடனும் நாட்டின் மகள்கள் இன்று ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தலைமையிலான எங்கள் அரசாங்கம் 'பெண்கள் தலைமையிலான மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது" என பதிவிட்டுள்ளார்.
சக்தியின் அம்சம் பெண்கள்
காங்கிரஸ் கட்சி தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், நாளைய பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாக உறுதியளிப்போம், மேலும் அனைத்து உயரங்களையும் அடையும் சக்தியை அவர்களுக்கு வழங்குவோம் என்று பதிவிட்டுள்ளது.
பெண் குழந்தைகள் கொண்டாட்டம்
ஆண்டுதோறும், ஒரு புதிய கருப்பொருளின் அடிப்படையில், பெண் குழந்தைகளுக்கான தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில், 'ஒளிமயமான நாளைக்காக பெண்களை மேம்படுத்துதல்' என்றும், 2020 இல் 'எனது குரல், எங்கள் பொதுவான எதிர்காலம்' என்றும், 2021 இல், 'டிஜிட்டல் தலைமுறை, எங்கள் தலைமுறை' என்பதும் தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்கான கருப்பொருளாக இருந்தது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (Pradhan Mantri Rashtriya Bal Puraskar) விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார்.