சின்ன தம்பியை பாதுகாக்க இதை செய்யுங்க... பீட்டா அமைப்பு யோசனை
சென்னை: காட்டு யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான பிரச்னையை சமாளிக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
வனங்களை அழித்து மனிதன் தனக்கு வேண்டிய வகையில் அங்கு வீடுகளை கட்டி, வனங்களை ஆக்கிரமித்துக் கொண்டான். அதன் விளைவாய் மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் மோதல் ஏற்படுவது இயல்பாகிவிட்டது.
குறிப்பாக, காட்டு யானைகளின் வழித்தடங்கள் அழிக்கப்பட்டதால் அவை ஊருக்குள் வருவதும், அச்சுறுத்துபவர்களை தாக்குவதையும் வழக்கமாக வைத்துள்ளன. இந்த மோதல்களை முடிவுக்கு கொண்டுவர வனவிலங்குகளுக்கே அதிக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
சின்னதம்பி யானை
உதாரணமாக, கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்ன தம்பி என்ற காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டி
அடிக்க முயன்ற வனத்துறையினர், அந்த யானையை ஜேசிபியை கொண்டு மோசமாக சுற்றிவளைத்து டாப்சிலீப் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் சின்ன தம்பி யானை 100 கிலோ மீட்டர் மேல் கடந்து வந்து உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் முகாமிட்டுள்ளது. யானை வழித்தடங்கள் அழிக்கப்பட்டதால், குடும்ப உறுப்பினர்களை தேடி சின்ன தம்பி காட்டுயானை அலைந்து வருகிறது.
வனவிலங்கு ஆர்வலர்கள்
இந்நிலையில், விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும், சின்ன தம்பியை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம் இதுவரை யாரையும் தாக்காத சின்னத் தம்பியை கும்கியாக மாற்றி மனிதர்களின் அருகிலேயே வைத்தால் அது உயிருடன் இருக்கும் என்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.
சமாளிக்க வழிமுறை
இதற்கிடையே, சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னதம்பி யானை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் பீட்டா அமைப்பு காட்டு யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான பிரச்னையை சமாளிக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது
பீட்டா கடிதம்
தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு பீட்டா அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் மேற்கண்ட தகவலை கூறியுள்ளது. மேலும் யானைகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாய நிலங்களை சுற்றி மிளகாய் சாகுபடி செய்ய வேண்டும். மேலும் சின்ன தம்பி மற்றும் பிற யானைகளின் இயற்கை வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பீட்டா அமைப்பு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.