நீட் தேர்வு ஒரு மோசடி.. மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கு.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
சென்னை: நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தேசிய தேர்வு முகமையால் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ படிப்புகளுக்காக நம் நாட்டில் நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக, ஆரம்பத்தில் இருந்தே இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த மே மாதம் 3ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது.

இந்த நிலையில், தேர்வின் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு விரைவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரத்து என செய்தி வெளியானதும், அந்த தேர்வை எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த மாணவ, மாணவிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பல மாதங்களாக தீவிரமாக படித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி.. அது இதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது என்று கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. நீட் குளறுபடிகள் ஆண்டுதோறும் தொடர்கதையாகி விட்டன. இப்போது, ராஜஸ்தானில் நீட் கேள்வி தாள் முன்கூட்டியே வெளியானது தெரிந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வையே ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
ஏழை-எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு, நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தி.மு.கழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுக்கிறார்.
அந்த மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் - நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்! தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications