"உதயநிதி.. உதார்நிதி.. அன்னைக்கு அவ்வளவு பேசினாரே, இப்போ எங்கே?".. சரமாரி கேள்வி கேட்ட மாஜி அமைச்சர்
உதயநிதி குறித்து ஜெயக்குமார் விமர்சனம் செய்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: "உதயநிதி ஒரு உதார்நிதி.. நீட்டுக்கு எதிராக அன்னைக்கு அவ்வளவு பேசிய உதயநிதி, இன்னைக்கு எங்கே போனார்? நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகளுக்கு திமுகவே பொறுப்பு" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜெயக்குமாருக்கும், உதயநிதிக்கும் ஏழாம் பொருத்தம்.. கடந்த வருடம் இவர்கள் 2 பேரும் மாறி மாறி விமர்சித்து கொண்டது, சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"நான் தீவிர அரசியலுக்கு வர வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது' என்று உதயநிதி ஒருமுறை சொல்லி இருந்தார்.

விமர்சனம்
அதற்கு ஜெயக்குமார், 'தீவிர அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்... அதில் எந்த தவறும் இல்லை. அரசியல் என்பது ஒரு கடல் போல. அதில் எத்தனை பேர் குதிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எத்தனை பேர் பத்திரமாக கரை சேர்வார்கள் என்பதுதான் முக்கியம்.. எத்தனை உதயநிதிகள் வந்தாலும், அதை சமாளிக்கும் திறனும் திராணியும் எங்களிடம் உள்ளது, சாக்லேட் பாய் என்று சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்து பன்ச் தந்தார்.

சாக்லேட் பாய்
உடனே உதயநிதி, "சாக்லேட் பாய் என்பது கெட்ட வார்த்தை கிடையாது... அது நம்மை புகழும் சொல்தான். என்னை சாக்லேட் பாய் என்று சொன்னவர் ஒரு பிளே பாய்" என்று பதிலடி தந்தார்.. இப்படி ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் இடையேயான காமெடி கலாட்டாவை இந்த தமிழகமே வேடிக்கை பார்த்தது.

பேட்டி
இப்போது மறுபடியும் உதயநிதியை சீண்டி ஒரு பேட்டி தந்துள்ளார் ஜெயக்குமார்.. செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி திமுக வாக்குறுதி தந்தது.. நீட்டுக்கு விலக்கு பெற அதிமுக ஆட்சியில் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.. ஆனால் மாணவர் சமுதாயத்தை திமுக ஏமாற்றிஉள்ளது.. திமுக அளித்த வாக்குறுதியை நம்பி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகவில்லை..

விலக்கு
அதிமுக ஆட்சியில் இருந்த சட்டத்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள் தான் இப்பவும் இருக்கிறார்கள்.. அவர்கள் தான் அப்போதும் நீட்டுக்கு எதிரான சட்ட முன்வடிவை தயாரித்தார்கள்... இப்போது நீட்டிலிருந்து விலக்கு பெற்று விட முடியுமா?

உதார்நிதி
தமிழகத்தின் நிழல் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார்.. உதயநிதி ஒரு உதார்நிதி.. நீட்டுக்கு எதிராக அன்னைக்கு அவ்வளவு பேசிய உதயநிதி, இன்னைக்கு எங்கே போனார்? நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகளுக்கு திமுகவே பொறுப்பு.. தயவு செய்து மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம்.. என்றார்.

குற்றச்சாட்டு
ஆனால், இன்று ஜெயக்குமார் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு நேற்று முன்தினமே உதயநிதி பதிலளித்துவிட்டார்.. தற்கொலை செய்து கொண்ட தனுஷ் வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்று, பெற்றோர்களிடம் ஆறுதல் தெரிவித்து 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.. பிறகு, அதிமுக ஆட்சியில் நீட் தேர்வால் 14 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது தனுஷ் உயிரிழந்துள்ளார்" என்று உதயநிதி ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

பாஜக
மேலும், "மத்திய அரசை நடத்துகின்ற அதிமுக கூட்டணியான பாஜகவுக்கு நீட்டை ஒழிக்க மனமில்லை, அதை எதிர்த்து கேள்வி கேட்க துணிவற்ற திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் கழக அரசை குறை சொல்வது வெற்று அரசியல் மட்டுமே" என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினும், இது தொடர்பாக முந்தைய அதிமுக அரசையும் குற்றஞ்சாட்டி இருந்தார்..
Recommended Video

தற்கொலைகள்
"இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவரான இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான்.. நீட் தேர்வு அச்சத்தில், அனிதா உள்பட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான்... குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்ததும் அதிமுக ஆட்சிதான்.

விமர்சனம்
இப்போது உயிரிழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான்.. சிஏஏ மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, பாஜக கூறியபோது, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அதிமுக நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்த தெம்பு, திராணி அதிமுகவிற்கு இல்லை. அதைச் செய்திருந்தால், நீட் தேர்வுக்கு ஓரளவிற்கு விலக்கு கிடைத்திருக்கும்" என்று காட்டமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications