பூங்கோதை ஆலடி அருணா மீதான புகார்... கான்ட்ராக்ட் ஒதுக்கீட்டில் என்ன பிரச்சனை..?
சென்னை: கடந்த வாரம் நடைபெற்ற நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடனான ஸ்டாலின் சந்திப்பில், ஆலங்குளம் எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா மீது கான்ட்ராக்ட் ஒதுக்கீடு தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.
நெல்லை மேற்கு மாவட்டத்தை பொறுத்தவரை அய்யாதுரை பாண்டியன் ஒரு டீமாகவும், மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் ஒரு டீமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதில் பூங்கோதை ஆலடி அருணா எந்த டீமிலும் சிக்காமல் தொகுதிப் பணிகளை மட்டும் முன்னிறுத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், யார் அணியிலும் இடம்பெறாத பூங்கோதை ஆலடி அருணாவை, 4 ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இணைந்த முக்கூடல் பேரூர் நிர்வாகி லட்சுமணன் என்பவர், வாலண்டியராக வம்பில் இழுத்துவிட்டுள்ளார்.
திமுகவினருக்கு கான்ட்ராக்ட் பணிகள் கொடுக்காமல் அதிமுகவினருக்கு கொடுப்பதாக அவர் கூறிய புகாரைப் பற்றி விசாரித்ததில், வழக்கம் போல் உட்கட்சி மோதலின் வெளிப்பாடாகவே அந்தப் புகார் கூறப்பட்டிருப்பது தலைமைக்கு தெரியவந்துள்ளது. பூங்கோதை மீது புகார் கூறுவதற்கு ஒரு வாரம் முன்பு வரை கூட அவருடன் ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர் லட்சுமணன்.
இப்படிப்பட்ட சூழலில் லட்சுமணனை யாரேனும் டியூன் செய்து புகார் கூற வைத்தார்களா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அய்யாதுரை பாண்டியன் தரப்பிலிருந்து மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டுள்ளன.
இதனிடையே மொத்த கான்ட்ராக்ட் பணிகளையும் லட்சுமணன் ஒருவரே எதிர்பார்ப்பது தவறு என்றும் திமுகவில் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை அவர் மறந்து செயல்படுகிறார் எனவும் பூங்கோதை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications