ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ரூ.72 லட்சம் மோசடி செய்த வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டை விலை பேசி பணத்தை வாங்கிவிட்டு, பத்திரப் பதிவு செய்து கொடுக்காமல் எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி ராஜா சிக்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, பரமன்குறிச்சி பிச்சுவிளையைச் சேர்ந்தவர் கோபி (45). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏரல் தவெக நகர செயலாளர் ராஜாவின் வீட்டை ரூ.90 லட்சத்துக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் வீட்டை விற்பனை செய்வதாக கூறி ரூ.72 லட்சம் பணத்தை பெற்று கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் ராஜா ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தவெக நிர்வாகி ராஜா மீது கோபி புகார் அளித்துள்ளார்.
கிரைய ஒப்பந்தம் செய்ய முன்பணமாக ரூ.72 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு ராஜா கூறி இருக்கிறார். மேலும் மீதமுள்ள ரூ.18 லட்சத்தை உங்கள் பெயருக்கு பத்திர பதிவு செய்து தரும் போது கொடுங்கள் என கோபியிடம் ராஜா கூறியிருக்கிறார்.
இதனை நம்பி ராஜாவின் வங்கி கணக்கிற்கு ரூ.72 லட்சத்தை கோபி செலுத்தியுள்ளார். ஆனால் ரூ.72 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அதோடு தவெக நிர்வாகி ராஜா தலைமறைவாகி உள்ளார். வங்கி கணக்கிற்கு ரூ.72 லட்சம் பணம் வந்தவுடன், ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகியோர் சொத்தை கிரயம் செய்து தராமல் கோபியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர்.
மேலும் தங்களது வீட்டைப் பூட்டி, ஊரை காலி செய்துவிட்டு தலைமறைவாகினர். இதுகுறித்து கோபி அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து போலீசில் கோபி புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து தவெக நிர்வாகி ராஜா மற்றும் அவரது மனைவி பொன்தெய்வம் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்த தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications