Arun Roy: குவாரி நீரை சுத்திகரித்து சென்னைக்கு குடிநீர்! 2017ல் சாதித்த அருண் ராய் ஐஏஎஸ்! யார் இவர்?
சென்னை: தமிழக மின்வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அருண் ராய் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். இவரது சாதனைகள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம். இவர் இதற்கு முன்பு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர், தொழில்துறை செயலாளர், உயர்கல்வித் துறைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தார்.
தமிழகத்தில் நேற்றைய தினம் 19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டனர். அதில் முக்கியமானவர்களில் ஜே.ராதாகிருஷ்ணனும் ஒருவர். அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக மின்வாரியத் துறை தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக அருண் ராய் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த அருண் ராய்
அருண் ராய், 2003 ஆம் ஆண்டு தமிழக பேட்ச்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. இவரது சொந்த ஊர் கேரளா, மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட இவர் ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகியவற்றை சரளமாக பேசுவார்.
இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டம் பயின்றார்.
கடலூர் துணை ஆட்சியராக பணியாற்றினார். இதையடுத்து நிதித் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர். ராமநாதபுரத்தில் நில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆட்சியராக பதவி வகித்தார். மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையர், மனிதவள மேம்பாட்டுத் துறை பதிவு இயக்குநர், சென்னை மாநகர குடிநீர் விநியோகம், வடிகால் வாரிய பிரிவின் மேலாண் இயக்குநாகவும் பணியாற்றியுள்ளார்.
ஸ்டாலின் முதல்வராக இருந்த போது ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்பதை எட்ட, தொழில் துறை செயலாளராக டிஆர்பி ராஜாவுக்கு நியமிக்கப்பட்டவர் அருண் ராய், இவர் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018-இன் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் ராய் செய்த சாதனைகள்
2004 ஆம் ஆண்டு அருண் ராய், ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக இருந்தபோதே, கடலூரில் சுனாமி பாதித்த பகுதிகளில் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து சுனாமியால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வீடு கட்டும் பணிகளை செய்திருந்தார்.
அது போல் கடந்த 2005 ஆம் ஆண்டு சார் ஆட்சியராக இருந்த போது சிதம்பரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
குடிநீர் வாரியத் தலைவராக இருந்த போது, 2017ஆம் ஆண்டு சென்னையின் குடிநீர் கஷ்டம், வறட்சியை போக்கி, குடிநீர் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க தீவிரம் காட்டினார். அது போல் காஞ்சிபுரம் மாவட்டம் சிக்கராயபுரம் பகுதியிலஸ் பழைய கைவிடப்பட்ட 22 குவாரிகளில் தேங்கியிருந்த நீரை சுத்திகரித்து அதை செம்பரம்பாக்கத்திற்கு அனுப்பி சென்னை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் வரை நீரை விநியோகம் செய்து சாதனை படைத்தார்.
ஒரே நாளில் ஊரையே புரட்டி போடுவதை விட சிறு சிறு மாற்றங்களை எந்தவித தடையும் இல்லாமல் செய்வதில் அருண் ராய் ஐஏஎஸ் வல்லவர். அருண் ராய் துடிப்பான அதிகாரியாக மட்டுமல்லாமல் நேர்மையான அதிகாரியாகவும் அறியப்படுகிறார். தற்போது மின்வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அருண் ராய், தமிழகத்தில் பசுமை ஆற்றல் மீது கவனம் செலுத்துவார் என தெரிகிறது. பசுமை ஆற்றல் என்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒன்று. இந்த ஆற்றலில் கார்பன் உமிழப்படாது. இதனால் புவி வெப்பமயமாதலும் தடுக்கப்படும் என்கிறார்கள்.















Click it and Unblock the Notifications