Nellai Kavin: கவினை பெண் கேட்டு வரச் சொன்னதே சுர்ஜித்தான்! வதந்தி பரப்பாதீர்! காதலி வீடியோ
சென்னை: நெல்லை கவின்குமார் ஆணவக் கொலை விவகாரத்தில் அவருடைய காதலி நடந்தது என்ன என்பது குறித்து வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் சுர்ஜித், கவினை அழைத்து பெண் பார்க்க வரச் சொல்லி பேசியுள்ளான் என்றும் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் கவின்குமார் எனும் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் காதலியின் தம்பி சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை தூண்டிவிட்டதாக புகாரின் பேரில் சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் காவல் துறை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். அது போல் அவருடைய தாய் கிருஷ்ணவேணியையும் கைது செய்யுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருந்தார்.
நெல்லை கவின் சுபாஷினி
நெல்லையில் கவினை பெற்றோரை திமுக எம்பி கனிமொழி, அமைச்சர் கே.என்.நேரு, தொல் திருமாவளவன் எம்பி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தனர். இந்த நிலையில் கவினின் காதலி என சொல்லி ஒரு பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், நானும் கவினும் உண்மையாக காதலிச்சோம். செட்டில் ஆக நேரம் தேவைப்பட்டது என கவின் சொன்னதால் நான் என் வீட்டில் எங்கள் காதலை சொல்லவில்லை.
சுர்ஜித்
அதற்குள் சுர்ஜித், கவினை அழைத்து பெண் பார்க்க வரச் சொல்லி பேசியுள்ளான். கவினும் சுர்ஜித்தும் எங்கள் திருமணம் குறித்து பேசியதாகவே எனக்கு தெரியும். நான் சிகிச்சைக்காக வந்திருந்த கவினுடைய குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தேன். அதற்குள் அப்படியொரு விஷயம் நடந்துவிட்டது. இது எதுவும் தெரியாமல் யாரும் வதந்தியை பரப்பாதீர்கள். தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். என் அப்பா, அம்மாவிற்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார் (28). இவர் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்குச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நோயால் அடிக்கடி அவதிப்பட்டு வந்த தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
மருத்துவ சிகிச்சை
மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர், சொந்த ஊருக்குச் செல்வதற்காக இருவரும் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த இளைஞர் ஒருவர், கவின்குமாருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கவின்குமாரை நோக்கிப் பாய்ந்துள்ளார். இதனால் பயந்த கவின்குமார், உயிரைக் கையில் பிடித்து ஓடினார். ஆனாலும் அந்த இளைஞர், கவினை துரத்திப் பிடித்து சரமாரியாக வெட்டினார். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட அந்த இளைஞர் நேராக காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சுர்ஜித் வெட்டியது ஏன்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடைய பெயர் சுர்ஜித் என தெரியவந்தது. அவருடைய தந்தை சரவணன், மணிமுத்தாறு பட்டாலியனில் எஸ்ஐயாகப் பணியாற்றி வந்தார். அதுபோல் அவருடைய தாயார் கிருஷ்ணகுமாரி, ராஜபாளையம் பட்டாலியனில் எஸ்ஐயாகப் பணியாற்றி வந்தார். கவினும் சுர்ஜித்தின் சகோதரியும் காதலித்து வந்தார்களாம். கவின் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு என சொல்லப்படுகிறது.
காதலுக்கு எதிர்ப்பு
இந்த காதல் வேண்டாம் என தனது சகோதரியிடமும் கவினிடமும் பலமுறை கூறியும் அதை இருவரும் கேட்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த சுர்ஜித் இது போன்ற ஒரு செயலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையில் கவின்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க இருந்த நிலையில் அதை வாங்க பெற்றோர் மறுத்துவிட்டனர். சுர்ஜித்தை தூண்டிவிட்ட அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
சஸ்பெண்ட்
இந்த நிலையில் சுர்ஜித்தின் பெற்றோர் இருவரையும் காவல் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். அது போல் நேற்று இரவு சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார். அவரது தாயையும் கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என கவின் குடும்பத்தினர் போராடி வருகிறார்கள். மேலும் எங்களுக்கு நிதி தேவையில்லை, நீதிதான் வேண்டும் என்றும் அவர்கள் கேட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications