திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலுக்கு அதிக வரவேற்பு.. தெற்கு ரயில்வே வெளியிட்ட சுவாரஸ்யம்
சென்னை: சென்னை-திருநெல்வேலி இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயிலை நடுத்தவர வயதினர் மற்றும் முதியவர்கள் அதிகம் விரும்புவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்படுகிறது. தமிழகத்திற்குள் சென்னையில் இருந்து திருநெல்வேலி, சென்னையில் இருந்து கோவை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. கோவை, நெல்லை ஆகிய இரு வந்தே பாரத் ரயில்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

திருநெல்வேலி - சென்னை ரயில் நிலையங்களுக்கு இடையே செப்டம்பர் 24 முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் குறித்தும், கேரளா உள்பட தெற்கு ரயில்வே இயக்கி வரும் ஆறு வந்தே பாரத் ரயில்கள் குறித்தும் தெற்கு ரயில்வே சில தகவல்கள் வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவலின் படி, " சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் இதுவரை 77 சதவீதம் பேர் பயணம் செய்துள்ளனர். 16 சதவீத அளவில் வர்த்தக பிரமுகர்கள் பயணம் செய்துள்ளனர். மொத்தத்தில் 36 சதவீத அளவில் 35 முதல் 49 வயது வரை உள்ள பொதுமக்கள் வந்தே பாரத் ரயிலில் விரும்பி பயணிக்கின்றனர். 64 சதவீதம் மற்ற வயது வரம்பில் உள்ள பயணிகள் பயணிக்கின்றனர்.
ஆறு வந்தே பாரத் ரயில்கள் தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை - மைசூர், சென்னை - கோயம்புத்தூர், சென்னை - திருநெல்வேலி, சென்னை - விஜயவாடா பிரிவில் தலா ஒரு வந்தே பாரத் ரயிலும், கோட்டயம் மற்றும் ஆலப்புழை வழியாக திருவனந்தபுரம் - காசர் கோடு பிரிவில் இரு தனி தனி வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க அதிக அளவிலான பயணிகள் விரும்புகின்றனர். இதற்கு காரணம் மற்ற ரயில்களை காட்டிலும் இந்த ரயில்களின் வேகம், நவீன மற்றும் விமான பயணத்திற்கு இணையான வசதிகளான இணையதள சேவை உதவியுடன் கூடிய மின்னணு தகவல் பலகைகள் உள்ளன. வசதியான இருக்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த எளிய நவீன வசதிகள், அவசர உதவிக்கு ரயில் லோகோ பைலட்டுடன் பேச டெலிபோன் வசதி, சிசிடிவி கண்காணிப்பு, தானியங்கி கதவுகள் உள்ளன. ஒவ்வொரு இருக்கை அருகிலும் மொபைல் சார்ஜிங் வசதி, எக்ஸிக்யூட்டி வகுப்பில் இருக்கைகளை திருப்பி ஜன்னல் வழியாக நேரடியாக வேடிக்கை பார்க்கும் வசதி உள்ளன.
ருசியான சைவ, அசைவ உணவு, காபி, டீ, தண்ணீர் பாட்டில் வழங்கல், ரயிலின் முன் பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை செல்லும் வசதி, காற்று அழுத்தத்தில் இயங்கும் சுத்தமான கழிப்பறைகள் ஆகியவை உள்ளன. இந்த நவீன வசதிகள் பயணிகளை வந்தே பாரத் ரயிலில் அதிக அளவில் பயணிக்க ஈர்க்கின்றன" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில், விருதுநகருக்கு 7.13க்கு வந்துவிடும். இரண்டு நிமிடம் கழித்து அதாவது 7.15க்கு புறப்படும். அதன்பிறகு 7 .50க்கு மதுரைக்கு செல்கிறது. அதனை தொடர்ந்து 8.40க்கு திண்டுக்கல், 9.50க்கு திருச்சியும், 11.54க்கு விழுப்புரமும், மதியம் 1.13க்கு தாம்பரமும், 1.50க்கு சென்னை எழும்பூரும் செல்கிறது. இதேபோல் மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 3.13க்கு தாம்பரமும், மாலை 4.39க்கு விழுப்புரமும், மாலை 6.40க்கு திருச்சியும், இரவு 7.56க்கு திண்டுக்கல்லும், இரவு 8.40க்கு மதுரையும், இரவு 9.13க்கு விருதுநகரும், இரவு 10.40க்கு திருநெல்வேலியை வந்தே பாரத் அடைகிறது. சென்னை முதல் திருநெல்வேலிக்கு சாதாரண ஏசி வகுப்பு கட்டணம் ஜிஎஸ்டி உட்பட ரூ.1,620 ஆக உள்ளது. ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் ரூ.3,025 ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications