மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை.. ஆம்ஸ்ட்ராங் வழக்கு குறித்து நெல்சன் திலீப்குமார் மனைவி விளக்கம்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா நெல்சன் (Nelson wife) சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பண பரிமாற்றமும் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அதனை திட்டவட்டமாக மறுத்து மோனிஷா நெல்சன் வழக்கறிஞர் மூலம் பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மோனிஷா நெல்சன் திலீப்குமார் அவர்களின் (எங்கள் கட்சிக்காரர்) அறிவுறுத்தலின் பேரில் இந்த பொது அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன்படி எங்களது கட்சிக்காரர் நெல்சன் திலீப் குமாரின் மனைவி ஆவார். நெல்சன் திலீப்குமார் முக்கிய இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். எங்களது கட்சிக்காரருக்கு (மோனிஷா நெல்சனுக்கு) எதிராக பல ஆன்லைன் தளங்கள், செய்தி தளங்கள், பொழுதுபோக்கு தளங்கள் மற்றும் சினிமா தளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து எனது கட்சிக்காரரைப் பற்றிய தொடர் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நேர்காணல்கள் மற்றும் செய்தி வீடியோக்கள் வெளியிடப்பட்டும் வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் 07ம் தேதி அன்று, வழக்கறிஞர் கிருஷ்ணன் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, எனது கட்சிக்காரரான மோனிஷா நெல்சனை போலீஸார் அழைத்து போலீசார் விசாரித்தனர். எனினும் மோனிஷா நெல்சன் அந்த விவகாரத்தில் காவல்துறையிடம் தெளிவுபடுத்தியதோடு, முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.

எனது கட்சிக்காரர் மோனிஷா நெல்சனுக்கும் வழக்கறிஞர் கிருஷ்ணனுக்கும் இடையே பணப் பரிவர்த்தனைகள் இருந்ததாக பொய்யாக ஊகித்து வதந்திகள் செய்திகளாக பரவி வருகிறது. இதனை கண்டு மோனிஷா நெல்சன் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். இப்படி பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என்பதை மோனிஷா நெல்சன் திட்டவட்டமாக மறுக்கிறார்.

எனது கட்சிக்காருக்கும் ( மோனிஷா நெல்சன்) அவரது கணவரின் (நெல்சன் திலீப்குமார்) நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில், அடிப்படை நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று மோனிஷா நெல்சன் கூறியுள்ளார். இதேபோல் பிறரையும் (சமூக ஊடகங்கள்) எனது கட்சிக்காரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணிக்கும் வகையில் வெளியிடப்படும் இத்தகைய செய்திகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மோனிஷா நெல்சன் குறித்து அவதூறு பரப்பும் வகையில்ல வெளியிடப்பட்ட அனைத்து செய்திகளையும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதனை பின்பற்றாத பட்சத்தில், எனது கட்சிக்காரரின் ( மோனிஷா நெல்சன்) நலன் மற்றும் நற்பெயரைப் பாதுகாக்க சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" இவ்வாறு அந்த பொது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications