சென்னையில யாரு சார் சாதி பார்க்குறாங்க? இந்த போட்டோவ பாருங்க! அபார்ட்மெண்டில் நவீன தீண்டாமை
சென்னை: சென்னையில் யாரு சாதி பார்க்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், அங்கு நவீன தீண்டாமைகள் தோன்றியுள்ளன. அப்படி ஒரு தீண்டாமைதான் இது.
சாதியும் அதன் விளைவாக தோன்றிய தீண்டாமையும் இந்தியாவில் இன்னும் அழிக்க முடியாத பெரும் நோய்களாக இருந்து வருகின்றன. தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற புரட்சியாளர்களாலும், திராவிட ஆட்சியாளர்களாலும் சாதியும், தீண்டாமையும் மற்ற மாநிலங்களை விட ஒப்பீட்டு அளவில் குறைந்து இருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டின் கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு எதிராக பதைபதைக்க வைக்கும் சாதிவெறி கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன.

கிராமங்களை ஒப்பிடுகையில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அனைவரும் சாதி, மதங்களை கடந்து கலந்து வாழும் சூழல் உள்ளதால் சாதி ரீதியிலான குற்றங்களும், வன்முறைகளும் குறைவு. எனவேதான் சென்னையில் யாரு சாதி பார்க்கிறார்கள் என்ற கேள்வியும் உதித்தது. ஆயினும், சென்னையில் படித்தவர்கள், உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கூட மறைமுகமாக சாதிய ஏற்றத்தாழ்வை கடைபிடிப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் தொழில் ரீதியாகவும், பொருளாதார அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வுடன் நடத்துகிறார்கள். காக்கா முட்டை உள்ளிட்ட பல திரைப்படங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன.
அப்படி ஒரு ஏற்றத்தாழ்வை உணர்த்தும் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய வேதனையை பகிர்ந்து உள்ளார் வங்கி ஊழியர் ராகுல் பாஸ்கர். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது, "பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் அந்த குடியிருப்புகளின் பராமரிப்புக்கென அசோசியேசன்களை தொடங்கி இருப்பார்கள். அப்படி ஒரு அடுக்குமாடி குடியிருப்பினுடைய அசோசியேஷன் முடிவு தான் கிழே இணைக்கப்பட்டு இருக்கிற புகைப்படம். மெத்த படித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அளவு பொருளாதார வசதியுள்ள ஒரு வர்க்கத்தின் கூட்டு மனநிலை இது.
காதலும் கடந்து போகும் படத்தில் இரண்டு சிறுவர்கள் சூப்பர் மார்க்கெட்டில் ஏதோ ஒரு பொருளை எடுத்து மாட்டிக்கொள்ளும்போது, விஜய் சேதுபதியிடம் அந்த கடையின் சூப்பர்வைசர் இனிமே கடை பக்கம் வர வேண்டாம்னு சொல்லுங்க என சொல்லுவார். அதற்கு விஜய் சேதுபதி,யார் ஏரியால வந்து கடைய தொறந்துட்டு யார வர வேண்டாங்குற என்று சொல்வது போல் ஒரு காட்சி இருக்கும். நவீன தீண்டாமை என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு அந்தக் காட்சி.
நகரம் விரிவடையும் போது அந்த நகரத்தில் வந்து குடியேறுகிறவர்கள் அந்த நிலத்தில் பல தலைமுறைகளாக வாழ்கிற பூர்வக்குடிகளை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவது, குற்றவாளிகளைபோல் சித்தரிப்பதை வாடிக்கையாகவே வைத்து இருக்கிறார்கள். பெரும்பாக்கம், செம்மஞ்சேரி என தூக்கியெறியப்பட்ட பலர் இதுப்போன்ற சொகுசு அப்பார்ட்மெண்ட்களில் இருக்கிற வீட்டு வேலைகளுக்குதான் சென்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் அங்கு எந்த அளவிற்கு மாண்போடு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு மேல இருக்கிற படம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. சமத்துவம் மறுக்கப்படுவது, அனைத்தும் மறுக்கப்படுவதற்கு சமம். ஒரு அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினுடைய விதிகள் அதில் உறுப்பினர்களாக உள்ளவர்களை மட்டுமே கட்டுப்படுத்தும். பொதுமக்களை தண்டிக்க செய்ய இதுப்போன்ற அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை." என்றார்.












Click it and Unblock the Notifications