மோடியை வீழ்த்திய ‘நேசமணி’ இப்போ சர்வதேச டிரெண்டிங்கில் 'ஹிட்'
Recommended Video
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை தோற்கடித்த 'நேசமணி' ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் உலக அளவில் டிரெண்டிங்கில் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக வாதங்கள் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. புள்ளி விவரங்களை முன்வைத்து எப்படி வென்றார்கள்? எப்படி தோற்றார்கள்? என ஆராய்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
புதிய மோடி சர்கார் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் என்ன? வெளியுறவுக் கொள்கை கடினமாகுமா? என்றெல்லாம் ஆய்வு கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. வலதுசாரிகள்- மையவாதிகளின் எழுச்சி- இடதுசாரிகளின் வீழ்ச்சி என உலகளாவிய ஒப்பீட்டு விவாதங்கள் நடைபெறுகின்றன
மத்திய அமைச்சர் பதவி.. 'இலவு காத்த' கிளியாய் 'ரி ட்வீட்' செய்யும் சு.சுவாமி
இவை அத்தனையையும் தூக்கி சாபிட்டுக் கொண்டிருக்கிறது 'நேசமணி' விவகாரம்.. திரும்பிய திசையெல்லாம் 'நேசமணி' மீம்ஸ்தான்.. லண்டன் டாக்டர் வந்தாரு.. இட்லி சாப்பிட்டாரு.. நேசமணி கொலையாளி சிக்கினாரு.. அப்பா முடியலை... விட்டுறப்பான்னு அழ வைக்கும் அளவுக்கு சமூக வலைதளங்களில் நேசமணி விவகாரம் கொடி கட்டிப் பறக்கிறது.
இதில் உச்சகட்டம் என்னவெனில் பிரதமர் மோடி இன்று பதவி ஏற்கிறார். அந்த விழாவுக்கு 6,000 விருந்தினர்கள் வருகின்றனர். டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைப் பொருட்டாகவே சமூகவலைதளவாசிகள் மதிக்கவில்லை.
ஒவ்வொரு மாநிலத்திலும் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என விவாதிக்கப்பட்டு வருகிறது. அதுவும் தமிழகத்தில் அமைச்சர் பதவியை முன்வைத்து அதிமுக உடையுமா? என்றெல்லாம் கூட ஒரு சூழ்நிலை இருக்கிறது. இதைப்பற்றி எந்த கவலையுமே இல்லை நேசமணி அன்பர்களுக்கு.
ஊரே ஒன்று கூடி 'நேசமணி'க்காக அத்தனை போராட்டத்தை செய்து கொண்டிருக்கிறது..அதன் விளைவுதான் மோடியையே ட்ரெண்டிங்கில் தோற்கடித்து இப்போது நேசமணி கொடி கட்டிப் பறக்கிறார்.
இத்தனைக்கும் பிரதமர் மோடி பதவி ஏற்பு தொடர்பாக இரு ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டையும் காலி செய்துவிட்டு டாப்பில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் நேசமணி.
போகிற போக்கைப் பார்த்தால் பிரதமர் மோடியின் பதவி ஏற்புவிழாவில் 'நேசமணியார்'தான் சிறப்பு விருந்தினராகவும் வாய்ப்பிருக்கிறது என்கிற அளவுக்கு நிலைமை இருக்கிறது.
எங்கோ ஒருவர் நேசமணி குறித்து பதிவு போட்டதன் விளைவு ஊரு உலகம் அத்தனையும் அதுபற்றியே பேச்சு.. எதையோ திசைதிருப்பத்தான் இந்த டிரெண்டிங் என்றெல்லாம் கூட பேசிப் பார்த்தார்கள். அதற்கும் கூட நேசமணி வடிவில்தான் பதில் கொடுக்கிறார்கள்.
டிரெண்டிங்கில் சுனாமியாக உருவெடுத்திருக்கும் நேசமணி விவகாரம் எந்த மோதலுக்கும் வித்திடாமல் அமைதியாக ஓய்ந்துவிட்டால் போகும். சமூக அமைதி, சமூக நீதி என அத்தனையையும் காப்பாற்றிய புண்ணியவானாக திகழ்வார் நேசமணி. அதுவரைக்கும் மீண்டும் சுத்தியலை அவர் தலையில் யாரும் போடாமல் இருந்தாலே போதும் சாமீ!
இதனிடையே நேசமணி ஹேஷ்டேக் உலக அளவிலான டிரண்டிங்கிலும் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது.. ஓடுகிறது...ஓடுகிறது... உலகம் முழுவதும் ஓடுகிறது!