நீட் தேர்வு விலக்கு மசோதா: குடியரசு தலைவருக்கு சீக்கிரம் அனுப்புங்க- ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்ரவியை, ராஜ்பவனில் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்று காலை 11 மணி முதல் 11.30 மணி வரை சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் உடனிருந்தனர்.
டாப் கியரில் திமுக.. நடிகையும் அப்செட்.. கரைகிறதா அமமுக?.. அந்த 2 பேர் காரணமாமே.. பரபரக்கும் டெல்டா
நீட் தேர்வு விலக்கு
இந்த சந்திப்பின்போது செப்டம்பர் 13ம் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்ததை நினைவுகூர்ந்த முதலமைச்சர் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் அதற்கு ஒப்புதல் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழகம் பாதிப்பு
மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மையை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தி இருக்கிறார். தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை ஆளுநருக்கு முதல்வரும், அமைச்சர்களும் எடுத்துரைத்துள்ளனர். முதல்வர் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநரும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு இல்லாத நிலை கொண்டு வரப்படும் என்பது திமுக தேர்தல் வாக்குறுதியாகும். எனவே அதை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் முதல்வர் முனைப்பு காட்டியுள்ளார்.
பருவமழை தீவிரம்
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதிலும் சமீபகாலமாக, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு வழக்கத்தை விட அதிக அளவுக்கு பல பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்றுமுன்தினம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 30 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டிலேயே தென்மாவட்டம் ஒன்றில் பெய்த அதிகபட்ச மழை அளவு இதுதான்.
இதுவரை இல்லாத மழை
இதேபோலத்தான் மழை பொய்த்துப்போன இடங்களில்கூட இந்த முறை கன மழை பெய்து இருக்கிறது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
புது சாதனை
தமிழ்நாட்டில் சராசரியாக 342.4 மிமீ மழை பெய்யும். அந்த சராசரி அளவை தமிழ்நாடு இப்போதே கடந்துவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது வரை 583.6 மிமீ மழை கொட்டியுள்ளது. கடந்த 1950ல் இருந்து 70 வருடங்களில் 10 சீசன்களில் இந்த அளவிற்கு மழை பெய்துள்ளது. இந்த சாதனை இந்த வருடம் நடந்துள்ளது.
நிதியுதவி
இதுகுறித்த விவரங்களையும் ஆளுநர் ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக, மத்திய அரசிடமிருந்து நிவாரண உதவிகளை பெற வேண்டிய தேவை இருக்கிறது. ஆளுநருடனான இந்த சந்திப்பை முதல்வர் இதற்கும் பயன்படுத்திக் கொண்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.