வீரப்பன்.. “அந்த ஒர்க்ஷாப்“ எமலோகத்தை கண்ணில் காட்டிய சங்கர் பிதரி! Netflixல் அம்பலம்
சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது கர்நாடகா போலீஸ் அதிகாரியான சங்கர் பிதாரி நடத்திய அட்டூழியங்களை ஒப்புதல் வாக்குமூலங்களுடன் அம்பலப்படுத்தி இருக்கிறது நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டுள்ள The Hunt for Veerappan எனும் ஆவணப் படம்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த ஆவணப்படமாக The Hunt for Veerappan எனும் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பாகங்களைக் கொண்டது. சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, கர்நாடகா, தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள், தமிழ் தீவிரவாதி மாறன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வீரப்பன் கூட்டாளி அன்புராஜ், பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட்ட பலரது வாக்குமூலங்களுடன் இந்த தொடர் வெற்றிகரமாக் கவனம் ஈர்த்துள்ளது.

இத்தொடரின் 2-வது பாகத்தில் கர்நாடகா காவல்துறை அதிகாரியாக இருந்த சங்கர் பிதாரி எனும் சங்கர் பிதரி செய்த அட்டூழியங்கள் மிகையின்றி புட்டமல்லாச்சாரி என்ற கர்நாடகா சிறப்பு அதிரடிப் படை: அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலத்துடன் ஆவணமாக்கப்பட்டுள்ளது.
புட்டமல்லாச்சாரி என்ற அந்த அதிகாரி சங்கர் பிதரி நடத்திய அட்டூழியங்கள் குறித்து கூறியதாவது: சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சங்கர் மாதேவ் பிதாரி பொறுப்பேற்ற போது 100க்கும் மேற்பட்ட நபர்களை அரெஸ்ட் செய்தாங்க. சந்தேகப்படும்படி யார் இருந்தாலும் அரெஸ்ட் செய்து ஒர்க்ஷாப் என்ற பில்டிங்குக்கு கொண்டு போனாங்க..

சங்கர் பிதாரியின் ஒர்க்ஷாப்: ஒர்க்ஷாப்னா அது ஏதோ சைக்கிளோ அல்லது மோட்டார் சைக்கிளோ அல்லது பஸ்ஸோ ரிப்பேர் செய்யுற இடம் இல்லை. மனுசங்களுக்கு டார்ச்சர் கொடுக்கிறதுக்குன்னு உருவாக்கப்பட்ட இடம் அது. ஒர்க்ஷாப்புன்னு சொன்னாலே மொத்த தமிழ்நாட்டையும் நடுங்குற மாதிரி செய்தவர் சங்கர் பிதாரி. மாதேஸ்வரன் மலைப் பகுதிக்கு ஒரு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மாதிரி இருந்தார். அவர் சொல்றதுதான் வேதவாக்கு.
2-வது எமலோகம்: ஒர்க்ஷாப்புங்கிறது 2-வது எமலோகம்னு சொல்லலாம். எமலோகத்தை பற்றி முன்னோர்கள் என்னசொல்லி இருக்காங்க? எண்ணெய் சட்டியில போட்டு வறுப்பாங்க.. பற்றி எரியுற நெருப்பில தப்பு செய்தவங்களை தள்ளிவிடறதுன்னு சொல்லுவாங்க.. அந்த டார்ச்சர் எல்லாம் எம்.எம். ஹில்ஸ்னு சொல்ற மாதேஸ்வரன் மலையிலும் நடந்துகிட்டுதான் இருந்துச்சு.

சிறுநீர் குடிக்க வைப்பது, நிர்வாணமாக்குவது: ஒரு பெரிய ஹால்.. 40,50 பேர் தங்கும் அளவுக்கும் இருக்கும். அதை இரண்டு பகுதியாக பிரிச்சிருந்தாங்க. ஒரு பக்கம் இவருக்கு வேண்டப்பட்டவங்க.. இன்னொரு பக்கம் இவருக்கு வேண்டப்படாதவங்க.. அந்த டைத்துலதான் சங்கர் பிதாரி தமது 3-வது கண்ணை திறந்து வைத்தாரு.. யூரின் குடிக்க வைக்கிறது; பொண்ணுங்களை அம்மணமாக்கி கண்ணு முன்னாடியே ஆடவைக்கிறது.. இதெல்லாம் சங்கர் பிதாரியின் டார்ச்சர்.

8 அப்பாவிகள் சுட்டுக் கொலை: வீரப்பனுன் கூட்டாளிகளும் ஒரு போலீஸ் கான்வாயை தாக்குன இடத்துக்குப் போயிருந்தோம்.. அங்க ரத்த ஆறு ஓடிகிட்டு இருந்துச்சு.. அங்க சங்கர் பிதாரி சார் வந்தாரு.. அங்க வந்து சுத்தி எல்லா இடத்தையும் பார்த்துட்டு என்னைத்தான் கூப்பிட்டாரு.. புட்டோ இங்க வான்னு கூப்பிட்டாரு. அந்த மனுசனோட மைண்ட் எப்படின்னு கேட்டீங்கன்னா.. ஒர்க்ஷாப்புல யார் யார் இருக்காங்கன்னு அவருக்கு மனப்பாடமா தெரியும். கார் மேல உட்கார்ந்துகிட்டு சிலரோட பேரு எழுதி உடனே ஜீப்பை எடுத்துட்டுப் போய் இந்த 8 பேரை கூட்டிகிட்டு வாங்கன்னு சொன்னாரு.. சொன்ன மாதிரி அவங்க 8 பேரை கூட்டுகிட்டு வந்து மரத்துகிட்ட நிப்பாட்டினோம். (அவங்களை சுட்டு கொன்னாச்சு).. இந்த மாதிரி சம்பவங்கள் நம்மோட வீக்னெஸ்ஸைதான் வெளிப்படுத்தும் நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்து நான் ரொம்பவே மனதளவில் காயப்பட்டேன். எனக்கு நாமெல்லாம் போலீசே இல்லை.. காவல்துறையும் கொலைகாரங்கன்னுதான் தோணுச்சு. இவ்வாறு புட்டமல்லாச்சாரி கூறினார்.













Click it and Unblock the Notifications