அதிரடி வியூகம்..அசாத்திய திறமை.. 23 வயதில் ஒலிம்பிக்கில்.. சென்னை தமிழச்சி நேத்ரா குமணன்.. யார் இவர்
சென்னை: 'Laser Radial' என்று அழைக்கப்படும் படகு ஓட்டுதல் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார் நம் சென்னை பெண் நேத்ரா குமணன். வெறும் 23 வயதில் இந்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
நேத்ரா குமணன்.. இந்த பெயரை நம்மில் பல பேர் கடந்த சில நாட்களுக்கு முன் வரை கேட்டிருக்க மாட்டோம். ஏன், இன்றும்கூட இந்தப் பெயர் பலருக்குப் புதிதாகவே இருக்கும்.
கிரிக்கெட் மிகச் சிறந்த விளையாட்டுகளில் ஒன்றுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுத் துறையில் மிகச் சிறந்த வீரர்களுக்கும்கூட நம் நாட்டில் மிகவும் தாமதமாகவே அங்கீகாரம் தரப்படுகிறது.

ஒலிம்பிக் தகுதி
அப்படி தாமதமாக, ஆனால் தனக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை இப்போது பெற்றுள்ளவர்தான் நேத்ரா குமணன். ஜப்பான் ஒலிம்பிக் 2021இல் படகு ஓட்டும் போட்டிக்காகத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 'Laser Radial' என்று அழைக்கப்படும் படகு ஓட்டுதலில் ஒரு பிரிவில் ஒலிம்பிக் தொடருக்கு நேத்ரா தேர்வாகியிருக்கிறார்.

சென்னை பெண் நேத்ரா குமணன்
நம் சென்னை பெண் தான் இந்த நேத்ரா குமணன். படகு ஒட்டும் விளையாட்டில் தனது 13 வயது முதல் அதிதீவிர பயிற்சியை இவர் மேற்கொண்டு வருகிறார். இவர் இதற்கு முன்னரும் பல தொடர்களில் இந்தியா சார்பில் கலந்துகொண்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது இவருக்கு வெறும் 16 வயதுதான்! அதில் நேத்ரா ஏழாம் இடத்தைப் பிடித்தார். மீண்டும் கடந்த 2018ஆம் ஆண்டு ஜகர்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இவர் பெற்றார். அதில் ஐந்தாம் இடம் பெற்றார்.

உலக கோப்பையில் பதக்கம்
அதன் பின்னர் அமெரிக்காவின் மியாமியில் நடந்த படகு ஓட்டும் விளையாட்டிற்கான உலகக் கோப்பையில் நேத்ரா கலந்துகொண்டார். அதில் மிகச் சிறப்பாகத் தனது திறமையை வெளிப்படுத்திய நேத்ரா, வெண்கலம் வென்றார். படகு ஓட்டும் விளையாட்டில் உலகக் கோப்பை தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பு மிகச் சாதனையையும் படைத்தார் நேத்ரா.

பயிற்சி எங்கே
ஸ்பெயின் நாட்டில் உள்ள கேனரி தீவில் நேத்ரா இப்போது பயிற்சி பெற்று வருகிறார். அவரது பயிற்சியாளராக ஹங்கேரியா நாட்டைச் சேர்ந்த தமாஸ் எஸ்ஸஸ் என்பவர் உள்ளார். இவரது பயிற்சியில்தான் நேத்ராவின் திறன் பல மடங்கு சிறப்பாக மாறியுள்ளது. தமாஸ் எஸ்ஸஸ் இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர். அவரது அனுபவமும் நேத்ராவுக்கு வரும் காலத்தில் ஒலிம்பிக் தொடரின் போது பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,

அதிரடி வியூகம்
ஓமன் நாட்டில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் முதல் இடம் பிடித்ததன் மூலம் நேத்ரா குமணன் ஒலிம்பிக் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளார். இந்தத் தகுதிச் சுற்றை அவர் எதிர்கொண்ட விதம் அனைவரையும் பிரமிக்க வைத்தது. அதாவது அனைத்து ரேஸ்களிலும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது நேத்ராவின் திட்டமில்லை. மாறாக அனைத்து ரேஸ்களிலும் தான் டாப் இடங்களில் இருப்பதை உறுதி செய்துகொண்டார். இதன் மூலம் ஒட்டுமொத்த புள்ளிக் கணக்கில் அவரால் எளிதில் முதல் இடம் பிடிக்க முடிந்தது. இதேபோன்ற திட்டத்தைப் பின்பற்றினால் ஒலிம்பிக் போட்டியிலும் அவர் பதக்கம் வெல்வது நிச்சயம்.

நேரடியாகத் தகுதி பெற்ற முதல் நபர்
மேலும், இதுவரை படகு ஓட்டும் போட்டியில் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து ஒன்பது பேர் தகுதி பெற்றிருந்தனர். ஆனால் அவர்கள் அனைவருமே ஆண்கள். நேத்ரா குமணன் தான் இந்தியாவிற்காகப் படகு ஓட்டும் போட்டியில் கலந்துகொள்ளும் முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி அந்த ஒன்பது பேரும் மற்ற நாட்டு வீரர்கள் விலகியதாலும், போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றனர். ஆனால், நேத்ரா குமணன் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் தொடரில் தமிழர்கள்
இவர் மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்து தற்போது வரை ஜப்பான் ஒலிம்பிக்கில் 4 பேர் பங்கேற்பது உறுதியாகியிருக்கிறது. டேபிள் டென்னிஸ் வீரர்கள் சரத் கமல், சத்யன் ஞானசேகரன், வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்தப் பட்டியலில் இப்போது நேத்ரா குமணனும் இணைந்துள்ளார். இவர்கள் அத்தனை பேரும் பதக்கத்துடன் நாடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.












Click it and Unblock the Notifications