கட்சி பூசலை விட்டுத்தொலைங்க, இப்படி பேசினா காங். எப்படி ஜெயிக்கும்? கார்த்தியை வறுக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எதிராக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்திருந்த ட்வீட்டிற்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் பொதுவில் இப்படி ட்வீட் செய்து சண்டை போட்டு இருக்க கூடாது என்று விமர்சனம் செய்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் இன்று செய்த ட்வீட்தான் தற்போது ட்வீட்டரில் ஹாட் டாப்பிக். தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றுவதற்காக ஐஏஎஸ் பதவியை சசிகாந்திற்கு ராஜினாமா செய்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் ட்வீட் ஒன்றை செய்ததுதான் சர்ச்சையாகி உள்ளது.

சர்ச்சை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்த ட்வீட்டில், "வீடியோவை மடைமாற்றம் செய்ய "விநாயகரை" கையில் எடுத்துள்ளது பாஜக. - ஒருங்கிணைப்பாளர் திரு சசிகாந்த் செந்தில்" என்று குறிப்பிட்டு இருந்தது. சசிகாந்த் செந்திலை அவரின் ஒருங்கிணைப்பாளர் பதவியை குறிப்பிட்டு காங்கிரஸ் ட்வீட் செய்து இருந்தது. இதை பார்த்ததும் கோபம் அடைந்த கார்த்தி சிதம்பரம் தனது ட்வீட்டில் ஒருங்கிணைப்பாளர் என்றால் எதற்கு? மொத்த கட்சிக்கும் ஒருங்கிணைப்பாளரா?

கேள்வி
அவருக்காக கட்சியில் புதிய பொறுப்பு எதுவும் உருவாக்கப்பட்டு இருக்கிறதா? என்று கடுமையாக கேட்டார். கட்சிக்கு எதிராக பொதுவில் கார்த்தி சிதம்பரம் இப்படி பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. கட்சியில் சேர்வதற்காக ஐஏஎஸ் பதவியை விட்டுவிட்டு வந்தவர் சசிகாந்த். அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கொடுத்ததும் காங்கிரஸ் கமிட்டிதான். அப்படி இருக்கும் போது சசிகாந்தை விமர்சிக்கும் வகையில் கார்த்தி சிதம்பரம் கோபமாக ட்வீட்டரில் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

விமர்சனம்
நெட்டிசன்கள் பலர் பொதுவில் நடக்கும் காங்கிரஸ் கட்சியின் இந்த உட்கட்சி மோதலை விமர்சிக்க தொடங்கி உள்ளனர். சண்டையை இப்படி பொதுவில் போடுவது தவறு. கட்சி பிரச்சனையை உங்கள் வீட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி எல்லாம் இருக்கிற வரை உங்கள் கட்சி தேசிய அளவில் வெற்றிபெற முடியாது என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.

உட்கட்சி
இன்னும் சிலர் கார்த்தி சாரே..முதல்ல உங்க உட்கட்சி பூசலை விட்டுத்தொலைங்க.. இல்லேனா நீங்களே குழி தோண்டி காங்கிரஸ் கட்சியை புதைச்சிடுங்க.. ஒற்றுமை இல்லாததால தான் காங்கிரஸ் தமிழ்நாட்டுல உருப்படாமலே கிடக்கு.. ராகுல் உழைப்பையெல்லாம் நீங்களே வீணாக்கிவிட்ருவீங்க போல., என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணாமலை
ஐபிஎஸ் பதவியை துறந்து இதேபோல் பாஜகவில் இணைந்து தமிழ்நாடு பாஜக தலைவர் ஆனவர்தான் அண்ணாமலை. இந்த நிலையில் அண்ணாமலை - சசிகாந்த் இருவருக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவதிற்கான வேறுபாடு குறித்தும் நெட்டிசன்கள் பலர் ட்வீட் செய்து உள்ளனர். நெட்டிசன் ஒருவர், இது தான் அண்ணாமலையை பாஜக வச்சிருக்கிறதுக்கும், காங்கிரஸ் சசிக்கு கொடுக்கிற மரியாதைக்கும் உள்ள வித்தியாசம், காங்கிரஸ் வெற்றிபெற முடியாமல் போவதற்கும் காரணம் இதுதான், கருத்து முக்கியமா.. பதவி முக்கியமானு முடிவு பண்ணிடுங்க.. என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

காங் ஆதரவாளர்
இன்னொரு நெட்டிசன் கோபமாக, பாஜக வெற்றியடைய பாஜக தொண்டர்கள் வேண்டாம் ; காங்கிரஸ் தலைவர்களே போதும், என்று குறிப்பிட்டுள்ளார்.

நண்டு கதை
ஜாடிக்குள் சிக்கி இருக்கும் நண்டுகள் ஒன்றை ஒன்று வெளியேற விடாமல் தடுக்கும் பிரபல நண்டு கதையை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். இன்னும் பல நெட்டிசன்கள் இப்படியே வெளிப்படையாக கோஷ்டி மோதல் இருந்தால் கட்சி கடைசி வரை வெற்றிப்பெறாது, தேசிய அளவில் வெற்றிபெற கோஷ்டி மோதலை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications