"சார், இனி பைக்கே வேண்டாம்.." டிரெண்டாகும் ஆனந்த் சீனிவாசன் அட்வைஸ்! முடியல.. கதறும் நெட்டிசன்கள்
ஆனந்த் சீனிவாசன் சேமிப்பு வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சென்னை: பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் பல நேரங்களில் இவர் கூறும் தடாலடி சேமிப்பு டிப்ஸ்களை நெட்டிசன்களும் கலாய்க்கத் தொடங்குவார்கள். அதுபோல தான் சமீபத்தில் பைக் வாங்குவது குறித்து அவர் கொடுத்த பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் மிக முக்கியமான பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன். மற்றவர்கள் உலக பொருளாதாரம் குறித்துப் பேசும் பொது வீடுகளில் செய்ய வேண்டிய சேமிப்பு குறித்துப் பேசி டிரெண்டானவர் இவர்.
பொருளாதாரம், முதலீடு என்றாலே தெரியாதவர்களும் எப்படிச் சேமிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார். இவரது பல வீடியோக்கள் இதற்கு முன்பும் இணையத்தில் டிரெண்டாகி இருக்கிறது.

ஆனந்த் சீனிவாசன்
அதிலும் குறிப்பாகச் சென்னையில் 40 ஆயிரம் ரூபாய் இல்லையென்றால் குடும்பமே நடத்த முடியாது.. திருமணமே செய்து கொள்ளத் தேவையில்லை என்று கூறி அதிரடி காட்டினார். இந்த வீடியோ இணையத்திலும் டிரெண்டானது. மேலும், அனைத்து குடும்பங்களும் குறைந்தது 400 கிராம் தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியும் டிரெண்டனவர். பல நேரங்களில் இவர் கூறும் தடாலடி சேமிப்பு டிப்ஸ்களை நெட்டிசன்களும் கலாய்க்கத் தொடங்குவார்கள். அதுபோல தான் சமீபத்தில் பைக் வாங்குவது குறித்து அவர் கொடுத்த பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ராயல் என்பீல்டு
அந்த வீடியோவில், நெறியாளர் தனக்கு பைக் வாங்க வேண்டும் என்று ஆசை எனக் குறிப்பிடுகிறார். அதற்கு ஆனந்த் சீனிவாசன், "உனக்கு இப்போது எதுக்கு பைக்" என்று முதல் பாலிலேயே ஆப் செய்துவிடுகிறார். மேலும், "ஏற்கனவே ஸ்கூட்டர் வைத்திருக்கிறார். பிறகு எதுக்கு உனக்கு பைக்" என்று கேட்க.. ஸ்கூட்டரில் இருந்து அடுத்த லெவலுக்கு செல்லவே பைக் வாங்க பிளான் செய்துள்ளதாகக் கூறுகிறார். ஸ்கூட்டரில் இருந்து காருக்கு செல்வது தான் அடுத்த லெவல் பைக்கிற்கு செல்வது இல்லை என்று குறிப்பிடும் ஆனந்த் சீனிவாசன், நெறியாளரிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறார்கள் எனக் கேட்கிறார்.

அட்வைஸ்
அதற்கு அவர் துரைப்பாக்கத்தில் இருந்து வருவதாகத் தெரிவித்தார். துரைப்பாக்கத்தில் ஷேர் ஆட்டோ, பறக்கும் ரயிலில் வந்தால் போதுமே என்று நறுக்கெனச் சொல்கிறார். பைக் வாங்க வேண்டும் என்றவரிடம் ஸ்கூட்டியே தேவையில்லை என்பது போல இருந்தது அவரது பதில்.. ஆனால், அத்துடன் இந்த வீடியோ முடியவில்லை. இதற்குப் பிறகு தான் செம சம்பவம் நடந்தது. நெறியாளர் தான் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்கத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் ஷாக்கான ஆனந்த் சீனிவாசன் வழக்கம் போலத் தனது சேமிப்பு அட்வைஸ்களை கொடுத்தார்.

விஜயகாந்த் போல
அதாவது 3.5 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு பைக் வாங்குவதற்குப் பதிலாக அதே 3.5 லட்சம் ரூபாயை ராயல் என்ஃபீல்டு பைக்கை தயாரிக்கும் ஐசக் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கலாம் என்கிறார். மேலும், 7 ஆண்டுகளுக்கு முன்பு ஐசக் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இதை முதலீடு செய்திருந்தால் பெரிய லாபம் கிடைத்திருக்கும் என்றும் கூறுகிறார். அப்போது ஆனந்த் சீனிவாசனுக்கு உதவிக்கு வரும் மற்றொரு நபர், விஜயகாந்த் போலப் புள்ளி விவரங்களை அடித்து நொறுக்குகிறார்.

ஐசக் மோட்டார்ஸ்
அதாவது 7 ஆண்டுகளுக்கு முன்பு ஐசக் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால் என்ன லாபம் வரும் என்பதை விளக்குகிறார். அவர் கூறுகையில், "ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பங்கின் விலை 1520 ரூபாய் என இருந்தது. 3 லட்ச ரூபாயை அதில் போட்டிருந்தால் 197 பங்குகள் கிடைத்திருக்கும். இது பார்க்க குறைவாகத் தெரியும். ஆனால் ஏழு ஆண்டுகள் இதை வைத்திருந்தால் எங்கேயோ போய்விடும். ஏழு ஆண்டுகளில் 8 முறை டிவிடன்ட் கொடுத்துள்ளனர்..

பங்கு மதிப்பு
அதன் மதிப்பே 1.95 லட்சமாகும். இடைப்பட்ட இந்த 7 ஆண்டுகளில் அவர்கள் போனஸ் தரவில்லை. ஆனால், பங்குகளை ஸ்பிலிட் செய்துள்ளனர். 10 ரூபாய் பங்குகளை ஒரு ரூபாய் பங்குகளாக மாற்றியுள்ளனர். 2020ல் பங்குகளை இப்படி ஸ்பிலிட் செய்துள்ளனர். இதன் மூலம் உன்னிடம் இருந்த 197 பங்குகள் 1970 பங்குகளாக மாறியிருந்திருக்கும். இப்போது ஒரு பங்கின் விலை 3166 ரூபாயாக இருக்கிறது. அதன் இப்போதைய மதிப்பு 62.36 லட்சம் ஆகும்" என்கிறார்.

கனவில் கூட நினைக்க மாட்டேன்
இதையெல்லாம் அருகில் இருந்த ஆனந்த் சீனிவாசன் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் பினிஷிங் டச்சாக அவர், "கடைசியில் ராயல் என்ஃபீல்டு தானே வாங்குகிறேன் என்று சொன்னா.. அதுக்கு பதிலாக ஐசக் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செஞ்சுரு" என்று கூறுவதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது. அப்போது எதிரில் நெறியாளரின் ரிஆக்ஷன் இருக்கே.. இனி ராயல் என்ஃபீல்டு பைக்கை கனவில் கூட நினைக்க மாட்டேன் என்பது போல இருந்தது அவரது ரிக்ஷன்.

நெட்டிசன்கள்
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதற்குப் பல விதமான கருத்துகளைக் கூறி வருகின்றனர். ஒரு தரப்பினர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி பைக் வாங்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல மற்றொரு நெட்டிசன் அப்போ ஏழு ஆண்டுகள் எப்படி வெளியே செல்வது என்று கேட்டுள்ளார். அதேநேரம் மற்றொரு தரப்பினர், "ஏழு ஆண்டுகள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி.. அவர் சொல்வது போல முதலீடு செய்திருந்தால்... பல மடங்கு லாபம் கிடைத்திருக்கும். எனவே, அவர் சொல்வது சரிதான்" என்றும் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications