ஒரு கிலோவை விடுங்க! ஒரே ஒரு தக்காளி என்ன ரேட் பாருங்க.. இதுக்கே தனியா சம்பாதிக்கணும் போல! ரொம்ப ஓவர்
சென்னை: தக்காளி விலை தொடர்ந்து எல்லை மீறிச் சென்றுள்ள நிலையில், கிலோ கணக்கில் என்பதையெல்லாம் மறந்து பொதுமக்கள் கிராம் கிராமாக எண்ணி தக்காளியைப் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பான படம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் என்ன தான் வறண்ட வானிலை நிலவி வெப்பம் அதிகமாக இருந்தாலும் கூட, நாட்டின் மற்ற பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. வட இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இதே நிலை தான்.

அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கனமழை கொட்டியே வந்தது. இதனால் அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தக்காளி: இந்த கனமழை மற்றொரு பிரச்சினையையும் கொண்டு வந்தது. அதுதான் காய்கறி விலை உயர்வு.. அதிலும் குறிப்பாகத் தக்காளி விலை கடந்த சில வாரங்களாகவே உச்சத்தில் இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 30- 40 ரூபாய்க்கு என இருந்த நிலையில், அதன் பிறகு கனமழையால் ஜெட் வேகத்தில் தக்காளி விலை உயர்ந்தது. நாட்டில் பல இடங்களில் தக்காளி விலை உச்சம் தொட்டது.
இதற்கு பொதுவாக இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது. முதலில் கனமழையால் தக்காளிப் பழங்கள் செடிகளிலேயே அழுகிப் போனது. இதனால் தக்காளி சாகுபடி குறைந்து வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. மற்றொன்று வெளுத்து வாங்கிய கனமழையால் விநியோக சங்கிலியும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதுவும் தக்காளி வரத்தில் சிக்கலை ஏற்படுத்த விலை கிடுகிடுவென உயர்ந்தது.
உச்சத்தில் விலை: தக்காளி விலை சில நாட்கள் ரூ. 200 வரை கூட சென்றது. அந்தளவுக்குத் தக்காளி விலை உச்சம் தொட்டது. கிலோ கணக்கில் தக்காளி வாங்கி சமைத்தவர்கள் கூட 100 கிராம், 50 கிராம் எனத் தக்காளி வாங்கி சமைக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே தக்காளி விலை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எந்தளவுக்கு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டும் படம் ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஒரே ஒரு தக்காளி: இப்போது விற்கும் விலையில் தக்காளி 500 கிராம் வாங்குவது கூட ஆடம்பரமாக மாறிவிட்டது. இதனால் இந்த நபர் ஒரே ஒரு தக்காளியைச் சமையலுக்கு வாங்கியுள்ளார். அதுவும் ரேட் எவ்வளவு தெரியுமா.. இந்த குட்டி தக்காளி ஒன்று 17 ரூபாயாம். நமது அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரில் தான் இது நடந்துள்ளது.
அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ. 140க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த 120 கிராம் தக்காளி 16.80 ரூபாயாம். அதுவும் 20 பைசா சில்லறை கிடைக்காது என்று 17 ரூபாயாக ரவுண்டாக்கியது என மொத்தம் இந்த ஒரே ஒரு தக்காளியை அவர் 17 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த பில்லை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இவர் மட்டுமில்லை நாட்டில் உள்ள பலரும் இப்படித்தான் தக்காளியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மாற்று வழிகள்: மறுபுறம் தக்காளிக்கு மாற்றாக எதைப் பயன்படுத்தலாம் என்றும் நெட்டிசன்கள் தீவரமாகத் தேடி வருகின்றனர். தக்காளி விலை உச்சம் தொடும் நிலையில், அதற்கு மாற்றாகத் தயிர், புளி மற்றும் எலுமிச்சை சாற்றை நாம் சமையலுக்குப் பயன்படுத்தலாம். தக்காளி வரத்து அதிகரிக்கும் வரை விலை அதிகமாகவே இருக்கும் என்பதால், அதுவரை இதைப் பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications