தேதி குறிச்சுட்டாரு ஸ்டாலின்..அக்கவுண்டுக்கு வருது 1000! ஜூலை மாதத்தில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் விடுபட்ட தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை விண்ணப்ப பதிவு தொடங்காததால் இல்லத்தரசிகள் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2021 திமுக தேர்தல் அறிக்கையில் கவனிக்கத்தக்க அம்சமாக மகளிர் உரிமை தொகை திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இருந்தது. இந்தியாவிலேயே முதன் முறையாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்தது.
எதிர்பார்த்தபடி அந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் இருக்கும் நிலையில் சுமார் ஒரு கோடி 15 லட்சம் பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமை தொகை
பல்வேறு காரணிகளால் ஏராளமான பெண்கள் இந்த திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற போது தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும், இதற்காக புதிய விண்ணப்பங்கள் பெறப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
புதிய விண்ணப்பம்
இதனையடுத்து ஜூன் மாதம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். புதிதாக திருமணமானவர்கள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், ஏற்கனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் என இலட்சக்கணக்கானோர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஆர்வத்தோடு காத்திருந்தனர். ஆனால் விண்ணப்ப பதிவு தொடங்காததால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்தனர்.
உங்களுடன் ஸ்டாலின்
இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் அரசு சரபோஜி கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15ஆம் தேதி முதல் மக்களின் குறைகளை போக்க உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் என அறிவித்தார். அப்போது மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விடுபட்டவர்களும் புதிதாக விண்ணப்பிப்பவர்களும் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம் என கூறியுள்ளார்.
இ சேவை மையங்கள்
இதனால் ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகள் விண்ணப்பிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் குடும்பத் தலைவிகள், தங்களது ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, 100 நாள் வேலைத்திட்ட அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு பாஸ்புக், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் ஆகியவற்றை கொடுத்து விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு இ சேவை மையங்கள் மூலமும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications